"மிஸ்டர் வேலுமணி".. மாஜி அமைச்சர் வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது.. ஹைகோர்ட்
எஸ்பி வேலுமணி வழக்குகளின் மீதான தீர்ப்பு சென்னை ஹைகோர்ட்டில் இன்று வெளியாகிறது
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது... சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. ஆனால், வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடியின் வலதுகரமான வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் ஸ்டாலின் பெரும்பாலும் பேசியது, அதிமுகவின் ஊழலை பற்றிதான்.. அந்தந்த அமைச்சர்களின் தொகுதிகளுக்கே சென்று, திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யாமல் விடமாட்டோம் என்று சொல்லி கொண்டே இருந்தார்.
கண்ணைக் காட்டிய எடப்பாடி.. ஸ்கெட்ச் போட்ட வேலுமணி.. டிச.2ல் இருக்கு.. பலத்தைக் காட்ட 'பலே’ திட்டம்!
இதுதான்டா திமுக
இதில் முக்கியமான நபர் எஸ்பி வேலுமணிதான்.. அதனால்தான், கோயம்புத்தூரில் ஸ்டாலினின் அன்றைய பிரச்சாரம் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டது.. "இது தான்டா திமுக... மிஸ்டர் வேலுமணி, திமுகன்னா என்னனு இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள ஜெயிலுக்குள்ள தள்ளுவேன்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
மிஸ்டர் வேலுமணி
ஆனால். அதேசமயம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திமுக அரசு முடிவெடுக்கவில்லை.. எந்த ஒரு குற்றச்சாட்டாக இருந்தாலும், அதற்கு முறையான ஆதாரங்களை திரட்டியும், முழுமையான விசாரணைகளை நடத்தியும், சட்டத்திற்கு உட்பட்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் திமுக அரசு உறுதியாகவே இருந்தது.. வேலுமணி தரப்பில் 3 முறை ரெயிடுகள் நடத்தப்பட்ட நிலையிலும்கூட, யாரையும் திமுக தரப்பு அவசரப்பட்டு கைது செய்யவில்லை.. "ரெய்டு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு, எடப்பாடியின் ஆதரவாளர்களுக்கு திமுக அரசு மறைமுகமாக உதவி கொண்டிருக்கிறது, இந்த ஒன்றரை வருடத்தில் யாரையாவது இந்த அரசு கைது செய்ததா?" என்று மூத்த தலைவர் கேசி பழனிசாமி உட்பட ஓபிஎஸ் தரப்பில் உள்ள அனைவருமே குற்றம்சாட்டும் அளவுக்கு, திமுக அரசு பொறுமையை கடைப்பிடித்து வருவதை மறுக்க முடியாது.
58 கோடி ரூபாய்
மற்றொருபக்கம், வேலுமணி தொடர்பான விசாரணையும் சட்டப்படி நடந்து கொண்டுதான் வந்தது.. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன... இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வேலுமணி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
முகாந்திரம்
அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி ஒரே ஐபி முகவரியில், ஒரே இடத்தில் இருந்து டெண்டர்களை முன்னாள் அமைச்சருக்கு நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வேலுமணியின் பினாமியான ராஜன் சந்திரசேகருக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.. மேலும், இந்த டெண்டர் முறைகேடு ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும், அது கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமில்லாமல், இப்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது.
சான்ஸஸ்
அதேபோல, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டார். புலன் விசாரணை அதிகாரியின், விசாரணை முடிவை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தார். இப்படி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது.
மாறி மாறி வாதம்
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றன... அப்போது வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பி அறிக்கை அளித்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததாகவும், தமிழக அரசும் 2020-ம் ஆண்டு ஜனவரியில் நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வாதிட்டப்பட்டது. அதேபோல, ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், அந்த குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
டைம் 2.30
இப்படி, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.. எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான வேலுமணி மீதான வழக்குகளின் தீர்ப்பு, இன்றைய தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிஸ்மிஸ்
சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் இந்த தீர்ப்பை அதிரடியாக வெளியிட்டனர்.. அதேபோல, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை நீதிபதிகள் ரத்து செய்தனர்.. இந்த தீர்ப்பினையடுத்து, டெண்டர் குறித்து போடப்பட்ட வழக்கானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுகவின் இன்பதுரை குற்றஞ்சாட்டி உள்ளார்.