போய் வரவா... எலக்சன் முடிஞ்சு போச்சு கிளம்புங்க! சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்பெஷல் ஏற்பாடு!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் தற்போது மீண்டும் சென்னை மற்றும் பிற நகரங்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,184 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 5,276 பேருந்துகள் இன்று மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டங்களுக்கு இடையிலும் கூடுதலாக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரியும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஒசூர்,கோவை, திருப்பூர், ஆகிய நகரங்களில் பணியாற்றுபவர்களும் அதிக அளவில் உள்ளனர்.

கடந்த 23ஆம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க இவர்களில் பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருந்தனர். அந்த வகையில், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல வசதியாக ஏப்ரல் 21ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கடந்த 21ஆம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,339 பேருந்துகள் இயக்கப்பட்டு, மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த நாளில் மட்டும் சுமார் 1.89 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி முதல் 23ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் சுமார் 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி நண்பகல் வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பயணிகள் கடும் அவதி
இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 22ஆம் தேதி இரவு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பகல் நேரத்தில் பேருந்துகள் சீராக இயக்கப்பட்டாலும், இரவு நேரத்தில் பேருந்துகள் எண்ணிக்கை குறைந்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் அதிருப்தியடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
போக்குவரத்துத் துறை
அப்போது சாலைகளில் அதிகமான வாகன நெரிசல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி பேருந்துகளை இயக்க முடியவில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு காத்திருந்த பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 23ஆம் தேதி காலை வரை சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. பூந்தமல்லி மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
5,276 பேருந்துகள்
சில நேரங்களில் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தாலும், நண்பகல் நேரத்திற்கு பிறகு நிலைமை சீரடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில், அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இன்று 5,276 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களும் இணைந்திருப்பதால் கூடுதல் கூட்டம் இருக்கும் என கணிக்கப்பட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்து கட்டணம்
இதற்கிடையில், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல நூறு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் பயணம் செய்யும் நடுத்தர மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைக்கேற்ப மேலும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Click it and Unblock the Notifications