வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்.. சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?.. அமைச்சர் பதில்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாமல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் நிரம்பி ரோட்டுக்கு மேலே வழிந்தோடியது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
மாம்பலத்திலிருந்து தியாகராய நகருக்கு செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதை, வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை என முக்கியமான சுரங்கபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாம்பரம், வேளச்சேரி, எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்கள் எல்லாம் ஏரிபோல் காட்சியளிக்கின்றன.

தேசிய பேரிடர் மீட்பு படையினர்
பல்வேறு இடங்களில், தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ள பாதிப்பு உதவிகளைப் பெற 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையின் வெள்ள பாதிப்புகளை நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். முதலில் வட சென்னை பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்தும், வெள்ள நீரை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அளித்தார்.

சிறப்பு பேருந்துகள்
மேலும், சென்னையில் பெரு வெள்ளம் இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பிவர்கள் இரண்டு நாள் கழித்து வரும்படி முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சென்னை வெள்ளக்காடாக இருப்பதால் சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுமா?
இந்த நிலையில் வழக்கம்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ' தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் மழை நீடிப்பதால் மக்கள் உடனே சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். நிலைமையை தொடரந்து கண்காணிக்கிறோம். ஆனாலும் சென்னை திரும்புவர்களுக்கு வசதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications