கோவை குலுங்குது.. பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கைகோர்க்கும் ஸ்டாலின் - ராகுல்! திமுக தலைமை அறிவிப்பு!
சென்னை: கோவை செட்டிபாளையம் L&T பைபாஸ் ரோட்டில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தேர்தல் களத்தி; அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி - விஜய் வசந்த், திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி - கோபிநாத், சிவகங்கை - கார்த்தி சிதம்பரம், விருதுநகர் - மாணிக்கம் தாக்கூர், கரூர் - ஜோதிமணி, கடலூர் - டாக்டர் விஷ்ணு பிரசாத், மயிலாடுதுறை - சுதா, திருநெல்வேலி - ராபர்ட் புருஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 12 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்.பி தமிழ்நாடு வருகிறார். அதன்படி ஏப்ரல் 12 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், அன்று மாலை கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
கோவையில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி அவர்களுடன் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ஏப்ரல் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையும் L&T பைபாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும், ஸ்டாலினும் வாக்கு சேகரிக்க உள்ளனர்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கோவையில் ரோடு ஷோ நடத்தினார். இந்நிலையில், கோவையில் திமுக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனால், கோவையில் தேர்தல் களம் சூடுபறக்கிறது.












Click it and Unblock the Notifications