சமத்துவத்தை விரும்பாத சக்திகள்.. மதத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சி! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
சென்னை: சமத்துவத்தை விரும்பாத சக்திகள் சில தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததால் மதத்தை சிலர் கையில் எடுத்திருப்பதாக பாஜகவை சூசகமாக சாடினார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்! ஆவலோடு விருப்பம் தெரிவிக்கும் அமைச்சர் முத்துசாமி!
தமிழில் அர்ச்சனை
அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம். மேலும் பல கோயில்களிலும் இதை விரிவுபடுத்த திட்மிட்டிருக்கிறோம். பெண் ஒருவரை நியமித்திருக்கிறோம். கோயில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு. எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறோம்.
சேற்றை வாரி இறைக்கிறார்கள்
சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தையும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இத்தனையும், இதற்கு மேலாக இன்னும் பல இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஒரு துறையில் மட்டும் செய்யப்பட்டிருக்கக் கூடிய சாதனைகள். இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
பொய் பித்தலாட்டம்
பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது.
217 இணையர்களுக்கு திருமணம்
அதனுடைய அடையாளம்தான் இன்று ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அறநிலையத் துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு, கட்டுப்பாட்டோடு, எழுச்சியோடு இங்கே நடந்திருக்கிறது. இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.