“எதை பார்த்தும் ஏமாந்துடாதீங்க.. சாதனையின் பக்கம் நில்லுங்க”: ஸ்டாலின் முன்னிலையில் சத்யராஜ் பேச்சு
சென்னை: "திராவிட மாடல் வேர்களை புரிந்துகொண்டால் அரசுக்கு எவ்வளவு துணையாக நிற்க வேண்டும் என்பது தெரியும். எதைப் பார்த்தும் ஏமாந்துவிடாதீர்கள், சாதனைகளின் பக்கம் நில்லுங்கள்" என இளம்பெண்களுக்கு நடிகர் சத்யராஜ் அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழ்நாடு அரசு சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சியை இன்று நடத்தியது. 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழக அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்த பெண்கள், தங்களின் வாழ்க்கையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உணர்ச்சிகரமாக பகிர்ந்து கொண்டனர்.

புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த பெண் ஒருவர் பேசும்போது, "பொருளாதாரத்தின் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தபோது, புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைத்த ரூ.1000 கல்லூரி படித்து முடிக்க உதவியது. இப்போது அரசின் தோழி விடுதியில் தங்கி சென்னையில் பணியாற்றி வருகிறேன்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் படித்து பலனடைந்துள்ளார். திருமணமாகி வீட்டில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், அத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சியில் இப்போது தன்னுடைய படிப்பு கனவை நிறைவேறிக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதனை திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி நின்று ஜெயிச்சிட்டேன் முருகா என சொல்லிவிட்டு தான் இங்கே வந்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசுகையில், "இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்ப்பதற்கு பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கண்ட கனவுதான் இது. உங்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருக்கலாம். உங்களுடைய முன்னேற்றம் திராவிட கருத்தியலில் இருந்து தொடங்குகிறது.
திராவிட மாடல் வேர்களை புரிந்துகொண்டால் அரசுக்கு எவ்வளவு துணையாக நிற்க வேண்டும் என்பது தெரியும். எதைப் பார்த்தும் ஏமாந்துவிடாதீர்கள், சாதனைகளின் பக்கம் நில்லுங்கள்." என இளம்பெண்களுக்கு நடிகர் சத்யராஜ் அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications