அதிமுக விமர்சனம் போதும்.. அடுத்து என்ன செய்ய போகிறீங்கனு சொல்லுங்கப்பா தேமுதிக!
சென்னை : கேட்ட தொகுதிகளை தரவில்லை எனக் கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது தேமுதிக. விலகல் முடிவை தேமுதிக தலைமை அறிவிக்கும் முன்பே அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அதிமுக.,வை கடுமையாக விமர்சிக்க துவங்கினர்.
பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிக., 41 சீட்களை ஒதுக்கும்படி கேட்டது. ஆனால் 13 சீட்கள் மட்டுமே ஒதுக்க அதிமுக தலைமை முன் வந்தது. அதற்கு மேல் ஒதுக்க முடியாது என பிடிவாதமாக மறுத்து விட்டது.
தொகுதி பங்கீட்டால் உடைகிறதா திமுக கூட்டணி... இழுபறிக்கு என்ன தான் காரணம்?
தேமுதிக.,வை வளைக்க போட்டி
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்த உடனேயே திமுக.,வும் கமலும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். யார் வந்தாலும் அரவணைக்க தயாராக உள்ளதாக கமல் பேட்டி அளித்தார். ஆனால் தேமுதிக எந்த பதிலும் கூறவில்லை. ஆனால் தேமுதிக வருவது பற்றி கமலும், சரத்குமாரும் தான் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக மீது விமர்சனம்
கூட்டணியில் இருந்து விலகியது முதல் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுக.,வை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தும், அவர் விமர்சனத்தை நிறுத்துவதாக இல்லை. மேலும், இப்போது மட்டுமல்ல இனி எப்போதும் அதிமுக.,வுடன் கூட்டணி இல்லை என கூறி உள்ளார்.
தொண்டர்கள் கொண்டாட்டம்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையே மக்கள் காமெடியாக தான் பார்த்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கலே துவங்க போகிறது, இந்த சமயத்தில் கூட்டணியில் இருந்து விலகியதை போய் இப்படி கொண்டாடுகிறார்களே என்ற விமர்சனம் தான் எழுந்துள்ளது.
அடுத்து என்ன செய்ய போறீங்க
அதிமுக.,வை விமர்சித்துக் கொண்டே இருக்கிறார்களே தவிர தனித்து போட்டியா, வேறு கட்சியுடன் கூட்டணியா என எந்த முடிவையும் தேமுதிக தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. திமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணிகளில் ஏற்கனவே கூட்டணி, தொகுதி பங்கீடு முடிந்து விட்டதால் தேமுதிக.,வை சேர்க்க வழியில்லை. வேறு ஏதாவது வழி இருக்கா என ஆலோசித்து வருகின்றன.
சின்னம் மட்டும் தான் ரெடி
அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என எந்த முடிவையும் அறிவிக்காமல் தேமுதிக தலைமை இருக்கும் நிலையில், அக்கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இனி முடிவை அறிவித்து, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டு, எப்போது மனுத்தாக்கலையும், பிரசாரத்தையும் துவக்க போகிறார்கள் என தெரியவில்லை.
போதும் விமர்சனம் நிறுத்துங்க
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே போதும் போதும் என்ற அளவிற்கு அதிமுக தலைமையை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பதற்கான வழியை பார்க்காமல் இன்னமும் அதிமுக.,வை பற்றியே விமர்சித்து கொண்டிருக்கிறீர்களே என தேமுதிக.,விடம் அக்கட்சி தொண்டர்கள் சிலரே கேள்வி கேட்டு வருகின்றனர்.