Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு சட்டவிரோதமானது- கலைச்சுடுங்க- வெங்கடேசன் எம்.பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது; அதனை கலைக்க வேண்டும்; மேலும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் துணை குழு தமிழகம் வரவே தேவை இல்லை என லோக்சபா எம்.பி.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் துணைக்குழு துணைத் தலைவர் பார்ட்ருஹரி மக்தாப், அமைப்பாளர் பேரா ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோருக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடித விபரம்: "நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் துணைக்குழு மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மே 19, மே 20 தேதிகளில் சுற்றுப் பயணம் செய்து அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய ஆய்வை செய்யப் போகிறது என்ற தகவல் எனது கவனத்திற்கு வந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் மதுரைக்கு வருவதில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் வருகிற அலுவல் ரீதியான நோக்கம் பற்றிய கருத்துக்களையே பதிவு செய்துள்ளேன்.

நேரு உறுதி மொழி

நேரு உறுதி மொழி

அலுவல் மொழி விதிகள் 1976 (1987, 2007, 2011 இல் திருத்தப்பட்டது) தொடர்ந்து பல ஆண்டுகளாக மீறப்பட்டு வருகிறது. அதன் நோக்கம் இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதாகவே சுருங்கி விட்டது. அலுவல் மொழி விதிகள் 1976 பல ஆண்டு விவாதங்கள், போராட்டங்களின் பின்புலத்தில் உருவானது. அவை எல்லாம் இம்மாபெரும் நாட்டின் மொழிப் பன்மைத்துவம் பாதுகாக்கப்பட நடந்தேறிய நிகழ்வுகளே ஆகும். எங்கள் தமிழ்நாடு இதற்கான போராட்டங்களில் 1938 லிருந்து 1965 வரை முன் வரிசையில் நின்ற மாநிலம். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு 1963 இல் இந்தி எப்போதுமே திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை தந்தார். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, நேரு அவர்களின் உறுதி மொழியை மீண்டும் புதுப்பித்தார்.

விதிவிலக்கான மாநிலம்

விதிவிலக்கான மாநிலம்

நாடாளுமன்றத்தின் ஆவணங்கள் இது பற்றிய முக்கிய விவாதங்களை காண்பிக்கக் கூடியவை. அவை எவ்வாறு தேசந்தழுவிய கருத்தொற்றுமை உருவானது என்பதற்கான சாட்சியமும் ஆகும். இப்பின்புலத்தில் தான் அலுவல் மொழி விதிகள் 1976 உருவாக்கப்பட்டது. அது இந்திய மாநிலங்களை "ஏ" "பி" "சி" என மூன்று வகைகளாக பிரித்து, மொழிப் பன்மைத்துவத்தை மதிக்கக் கூடிய வகையில் வெவ்வேறு உள்ளடக்கம் கொண்ட விதிகளையும் வகுத்தது. அதன் சாரம் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதுதான். எங்கள் தமிழ்நாடு அவ்விதிகளில் தனித்துவமான இடத்தைப் பெற்று இருக்கிறது. அதாவது அந்த விதிகளே தமிழ்நாட்டிற்கு பொருந்தாது, விதிவிலக்கு உடையது என்பதே.

தமிழகத்துக்கு தேவை இல்லை

தமிழகத்துக்கு தேவை இல்லை

மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் அலுவல் மொழி விதிகள் தொடர்ந்து மீறப்படும் இரண்டு அம்சங்களை சுட்டிக் காட்ட விழைகிறேன்.
*ஒன்று* நாடாளுமன்ற அலுவல் மொழி துணைக் குழுவின் வருகையே தேவையற்றது. அலுவல் மொழி விதிகளுக்கே முரணானது. காரணம், தமிழ்நாடு குறிப்பான விதிவிலக்கை அவ்விதிகளில் பெற்று இருப்பதுதான்.1976 அலுவல் மொழி விதிகள் (G.S.R 1052) - அலுவல் மொழிச் சட்டம் 1963 (19) பிரிவு 3 துணைப் பிரிவு (4) உடன் இணைந்த பிரிவு 8 இன் படியாக ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட விதிகளின் 1 (ii) கூறுவது இது.
" _இந்த விதிகள் இந்தியா முழுமைக்கும் - தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக - பொருந்தும்" - விதிகள் இவ்வளவு தெளிவாக உள்ளன. தமிழ்நாட்டை அவ்விதிகளின் வரம்பிற்குள்ளேயே கொண்டு வரவில்லை. அவ்விதிகள் பிரித்துள்ள "ஏ" "பி" "சி" என்று மூன்று வகை மாநிலங்களின் பட்டியலில் எதிலுமே தமிழ்நாடு இடம் பெறவில்லை. இப்படி இருக்கையில் அலுவல் மொழி துணைக் குழுவின் மதுரை வருகை எதற்கு, என்ன தர்க்க ரீதியிலான தேவை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. *இரண்டாவதாக,* தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள்/ துறை அலுவலகங்களில் "அலுவல் மொழி பிரிவு/ இந்தி பிரிவு" அமைக்கப்பட்டு இருப்பது ஏன்? விதிகளின்படி தேவையே இல்லையே?

தமிழகத்துக்கு வரவே கூடாது

தமிழகத்துக்கு வரவே கூடாது

எனவே இரண்டு வேண்டுகோள்களை முன்வைக்க விழைகிறேன். 1) மதுரைக்கு திட்டமிடப்பட்டுள்ள அலுவல்மொழி துணைக்குழு வருகையை ரத்து செய்யுங்கள். எதிர்காலத்திலும் தமிழ்நாட்டிற்கு துணைக்குழு வருகையை திட்டமிடாதீர்கள். 2) ஏற்கெனவே ஒன்றிய அரசு நிறுவனங்கள்/ துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள "அலுவல் மொழி பிரிவு/ இந்தி பிரிவு" களை கலைத்து விட வேண்டும். இவ்வேண்டுகோள்கள் இரண்டையும் அலுவல் மொழி விதிகள் 1976 (1987, 2007, 2011 இல் திருத்தப்பட்டது) க்கு உட்பட்டே முன் வைக்கிறேன். மற்றபடி மதுரை மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலான பயணமாக மதுரை வருகை தர வேண்டுமென்று உளமார விரும்புகிறேன்.
எனது வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+