பேனா சின்னத்தை உடைப்பீர்களா? பாஜக பி டீம் சீமான் திமிரை அடக்கனும்.. -சுபவீ கொதிப்பு
கருணாநிதியின் பேனா சிலையை எழுப்பினால் உடைப்பேன் என்று சீமான் பேசியது பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலின் வெளிபாடு என்று சுப.வீரபாண்டியன் விமர்சித்து இருக்கிறார்.
சென்னை: கருணாநிதி நினைவாக கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் எழுப்பினால் அதை உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலின் வெளிபாடு என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் விமர்சித்து இருக்கிறார்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலையும், அவர் கையெழுத்திட்ட திட்டங்களையும் நினைவுகூரும் வகையிலும் சென்னை கடற்கரையில் கடலுக்கு நடுவே அவரது பேனாவுக்கு சிலை வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
இதற்கு திமுகவினர் உட்பட பலரும் வரவேற்பு தெரிவிக்க மறுபக்கம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடல் சூழல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சூழலியல் ஆர்வலர்களும் தெரிவித்தனர்.
கருத்துக் கேட்புக்கூட்டம்
இந்த நிலையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பது பற்றி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, நாம் தமிழர், அதிமுக, பாஜக, மீனவர் சங்க பிரதிநிதிகள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சீமான் பேச்சு
அவர் பேசுகையில், "கருணாநிதி பேனாவுக்கு கடலுக்குள் நினைவு சின்னம் வைக்க வேண்டுமென்றால் அங்கு மண், கற்களை கொட்ட வேண்டும். இதன் காரணமாக பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லை என்று சொல்லும்போது பேனா சிலை அமைக்க பணம் எப்படி வந்தது. நாங்கள் பேனாவுக்கு சின்னம் வைக்கக்கூடாது என்று சொல்லவில்லை. வேண்டுமானால் அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
பேனா சிலையை உடைப்பேன்
கடலில் நினைவு சின்னம் எழுப்புவதை அனுமதிக்க முடியாது. எதை பற்றியும் உங்களுக்கு கவலை கிடையாது. கடற்கரையில் புதைக்க விட்டதே தவறு. நீங்கள் பேனாவை வைத்தால் ஒருநாள் நான் அதை உடைப்பேன்." என்று கூறினார். சீமானின் இந்த பேச்சால் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதுடன் சமூக வலைதளங்களிலும் அவருக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சுப.வீரபாண்டியன் கருத்து
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சுப.வீரபாண்டியன், "தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னை, கடற்கரைப் பகுதியில் தலைவர் கலைஞரின் பேனாவிற்குச் சிலை வைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது. அதில் தன் கட்சியின் கருத்தை உரைக்க, நாம் தமிழர் கட்சியின் சீமான் வந்துள்ளார். அதில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், "நீ பேனா வைத்தால் நானே அதை உடைப்பேன்" என்று அவர் பொதுவெளியில் பேசியுள்ளது வெறும் கருத்தாகாது. அது வன்முறையின் வெளிப்பாடு.
அண்ணாமலை, சுப்ரமணிய சாமி
அது வெறும் கருத்துதான் என்றால், இன்னொருவர் "நீ பேனா சிலையை உடைத்தால், நான் உன் கையை வெட்டுவேன்" என்று சொல்லக்கூடும். அதுவும் வெறும் கருத்துதான் என்று விட்டு விடலாமா? உடனே, "பாருங்கள் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது" என்பார் அண்ணாமலை. "அதனால் ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்பார் சு.சாமி.
பாஜக பி டீம்
நமக்குத் தெரியும், இவர்கள் அனைவரும் ஒரே நாடகக் கோஷ்டியின் வெவ்வேறு பாத்திரங்கள்! பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலில்தான், சீமான் பேச்சில் இவ்வளவு திமிர் வெளிப்படுகிறது. திமிரை அடக்கியே தீர வேண்டும்." என்று பதிவிட்டு இருக்கிறார். இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, "பாஜக BTeam திமிரை அடக்கியே தீர வேண்டும் - அண்ணன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.