ரூ.200 கோடி சுருட்டல்.. அமைச்சர்கள் போல ஆள் மாறாட்டம் செய்த சுகேஷ் சந்திரா.. விசாரணையில் அம்பலம்
சென்னை; மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக டெல்லி போலீசார் மோசடி வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். பெயில் வாங்கி தருவதாக கூறி பலரிடம் 200 கோடி ரூபாய் வரை இவர் மோசடி செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மோசடி, முறைகேடு வழக்குகள் உள்ளன. மொத்தம் 32 வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ளது. பெரிய அரசியல் தலைவர்களின் மகன் என்று கூறி பல்வேறு மோசடிகளை செய்து ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீது புகார் உள்ளது.
பெங்களூரை சேர்ந்த இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்று கூறி அரசுக்கு வாகனம் வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் உள்ளது. அதேபோல் இரட்டை இலை சின்னத்தைப் டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா மீது வழக்கு உள்ளது. இதற்கு ரூ. 50 கோடி லஞ்சம் பெற்றது உட்பட பல்வேறு பண மோசடி வழக்குகள், ஏமாற்று வழக்குகள் இவர் மீது உள்ளது.
.
ரெய்டு
இதற்காக சமீபத்தில் சென்னையில் இவர் சொகுசு பங்களாவில் ரெய்டு நடத்தப்பட்டு பல சொகுசு கார்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தான்தான் அழகிரி மகன் துறை தயாநிதி என்று கூறி சென்னையில் சுகேஷ் சந்திரா போலீசாரிடம் கூட ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இரட்டை இலை வாங்கி தருவது தொடர்பான வழக்கு மற்றும் பல்வேறு வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் இவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
முறைகேடு
இவரின் காதலி நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து பல இடங்களில் இவர் பண மோசடி செய்ததாக புகார் உள்ளது. சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் இவரின் வீட்டில் இருந்து பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவன கார்கள் மொத்தம் 16 கைப்பற்றப்பட்டுள்ளது.சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக டெல்லி போலீசார் மோசடி வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். பெயில் வாங்கி தருவதாக கூறி பலரிடம் 200 கோடி ரூபாய் வரை இவர் மோசடி செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புகார்
அதன்படி போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஷிவிந்தர் சிங் மற்றும் ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குனர் மால்விந்தர் சிங் ஆகியோருக்கு பெயில் வாங்குவதாக கூறி இவர் ஏமாற்றி உள்ளார். திகார் சிறையில் ஷிவிந்தர் சிங்கை சந்தித்த சுகேஷ் அவருக்கு பெயில் வாங்கி தருவதாக கூறி உள்ளார். வெளியே இருக்கும் என்னுடைய ஆட்களுக்கு பணம் கொடுத்தால் உனக்கு பெயில் கிடைக்கும் என்று கூறி உள்ளார். பின்னர் சிறையில் இருந்தபடியே ஐபோன் மூலம் மத்திய அமைச்சர்கள் பேசுவது போல பேசி ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் பணம் கறந்துள்ளார்.
மோசடி
மோசடி ஆப்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து போன் வருவது எண்ணை மாற்றி, குரலை மாற்றி பேசி இருக்கிறார். முதலில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் பிஏ பேசுவது போலவும், பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவது போலவும் பேசி ஏமாற்றி இருக்கிறார்.
ஜெய் ஹிந்த்
அதோடு அமித் ஷா லைனில் நாம் பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறார் என்றும் பொய் சொல்லி ஏமாற்றி உள்ளார். ஒவ்வொரு முறை போன் காலுக்கு பின்பாக ஜெய் ஹிந்த் என்றும் கூறி உள்ளார். ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இப்படி பேசி பெயில் வாங்கி தருவதாக வாக்கு கொடுத்து பல கோடிகளை கறந்துள்ளார். இதை சஞ்சய் சந்திரா உதவியுடன் ஹெல் கம்பெனிகள் வழியாக வேறு வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி உள்ளார்.
ஏமாற்றினார்
இதே முறையில் பெயில் வாங்கி தருவதாக கூறி ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குனர் மால்விந்தர் சிங்கின் மனைவி சப்னாவிடம் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இப்படி பெயில் வாங்கி தருவதாக 200 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை அனைத்தையும் அவர் ஜெயிலில் இருந்தபடியே செய்துள்ளார்.
டிராப் அவுட்
பக்காவாக அமைச்சர்களின் அலுவலகத்தில் இருந்து பேசுவது போல பேசி, கட்சி நிதிக்கு பணம் வேண்டும் என்று கேட்டு பணத்தை வாங்கி சுகேஷ் மோசடி செய்துள்ளார். இவருக்கு பின் பெரிய டீம் திட்டத்தோடு செயல்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இவர் வெறும் 12ம் வகுப்பு மட்டுமே படித்த "டிராப் அவுட்" என்பதுதான் டெல்லி போலீசாரை வியக்க வைத்துள்ளது.