சுக்கிர ஜெயந்தி.. காதல் நாயகன்.. அசுர குரு பிறந்தநாள்.. சுக்கிரயோகம் உங்களுக்கு இருக்கா? பாருங்க
சென்னை: நவ கிரகங்களில் அசுர குருவாக போற்றப்படும் சுக்கிரனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். ப்ருகு மகரிஷிக்கும் கியாதிக்கும் பார்கவ கோத்திரத்தில் மகனாக பிறந்த களத்திர காரகன் காதல் கிரகம் சுக்கிர பகவான் ஜெயந்தி நாளில் யாருக்கெல்லாம் சுக்கிர யோகம் இருக்கிறது என்று பார்க்கலாம்.
சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்

சுக்கிரன் இல்லாமல் சந்தோஷம் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மறைந்திருந்தாலும் மற்றும் நீச நிலை அடைந்திருந்தாலும் கூட சந்தோஷம் சிறிதளவேனும் இருந்தாலும் அது சுக்கிரனின் அருள்கொடைதான் காரணம். ஜோதிடத்தில் "குணப்படுத்துதல்" என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன்தான்.
குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்க்கும் காரகர் சுக்கிரபகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்கும் காரகர் சுக்கிரன். நம் வாழ்வின் சந்தோஷ தருணங்கள் எதுவென்றாலும் அதில் முதன்மையாய் நிற்பது சுக்கிரன்தான்.
மனிதர்களுக்கு பணம் பிரதானம். கருவறை முதல் கல்லறை வரை அனைத்திற்கும் நமக்கு பணம் தேவைப்படுகிறது. பணப்புழக்கத்தை தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கல்லாம் தெரியும்தானே!. நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்க்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன். சுக்கிரன் பிறந்த ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் சுகமும் சநதோஷமும் தேடி வரும்.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.
லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும்.
ஜாதகத்தில் சுக்கிரன் 3ஆம் வீட்டில் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். சுக்கிரன் 5ஆம் வீட்டில் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் 6ஆம் வீட்டில் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள் ஏற்படும்.
களத்திர ஸ்தானமான 7வது வீட்டில் சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.
சுக்கிரன் 8ஆம் வீட்டில் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை உண்டாகும். 9ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால்
சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும்.
பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் 10ஆம் வீட்டில் இருந்தால் இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும்.
12ஆம் வீட்டில் சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.
ஒருவருக்கு சுக்கிர யோகம் இருந்தால் கோடி கோடியாக செல்வம் தேடி வரும். சுக்கிர திசை ஒருவரின் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும். அதுவே சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு அனுகூலமற்ற நிலை உண்டாகும். சுக்கிரன் பலமாக இருந்து இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். சுக்கிரன் பலமிழந்து இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும்.
சுக்கிரன் பலமாக இருந்து மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்து மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
சுக்கிரன் பலமாக இருந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றயாவும் அமையும். சுக்கிரன் பலமிழந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதார தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார்.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பவர்கள் சுக்கிரதிசை, சுக்கிர புத்தி நடப்பவர்கள் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை, வெள்ளி விளக்கு ஏற்றி சுக்கிர பகவானை வழிபாடு செய்து வர கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications