"ஹேய் எப்புட்றா".. கிட்ட கிட்ட நின்ற எடப்பாடி + ஓபிஎஸ்.. ஸ்டாலின், மோடி.. ஒரே வீட்டில் லீடர்கள்.. செம
நெல்லையில் வைக்கப்பட்டுள்ள திருமண பேனர் ஒன்று காண்போரை கவர்ந்துள்ளது
சென்னை: நெல்லையில் வைக்கப்பட்டுள்ள ஒரு திருமண பேனர், காண்போரை கவர்ந்து வருகிறது.. இந்த பேனர்தான் இணையத்திலும் வேகவேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.
கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதற்காக பேனர் வைக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதில் பலர், அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் போட்டோக்களை வைத்து பேனர் அடிப்பார்கள்.. அல்லது கடவுள் படங்களை மட்டுமே அச்சிட்டு பேனர் வைப்பார்கள்..
ரகம் ரகமாக
சில சமயம், தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைவர்களின் போட்டோக்களை பதிவிடுவார்கள்.. சிலசமயம், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களையே, கட்டம்கட்டி, அந்த பேனரில் நிரப்பி நிரப்பி வைத்து விடுவார்கள். சில சமயம், அந்த கட் அவுட்டுகளில் மணமக்களுடன், மணமக்களின் நண்பர்களும் சரிக்கு சரிமாக இடம்பெற்றிருப்பார்கள்.. அதிலும் இந்த நண்பர்களின் மனக்கோட்டைகளில் மலர்ந்த வசனங்கள், காண்போரையே திக்குமுக்காட வைத்துவிடும்.. புதுசு புதுசாக யோசித்து, அனைவரையுமே ஈர்த்துவிடும் அந்த வாசகங்கள்.
திருமணம்
எனினும், கடந்த சில வருடங்களாக, இந்த பேனர் வைப்பதிலும் புதுமையும், வித்தியாசமும் புகுந்துவிட்டது.. ரகம் ரகமாக சிந்தித்து வாசகங்களையும் அதில் பதியவிடுகிறார்கள். ஆனால், நெல்லையில் ஒரு திருமணத்துக்காக பேனர் வைத்துள்ளார்கள்.. அந்த பேனர்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்சி தலைவர்களின் போட்டோவை பார்த்து, கல்யாண வீட்டுக்காரர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை யூகித்து விடலாம்... ஆனால், இந்த பேனரை பார்த்தால் குழப்பம்தான் ஏற்படுகிறது.. காரணம், எல்லா கட்சிக்கார தலைவர்களின் போட்டோக்களும் அதில் இடம்பெற்றுள்ளன.. டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடியைகூட பேனரில் விட்டுவைக்கவில்லை..
தயாநிதி மாறன்
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி அதில் வரிசையாக நின்றுள்ளனர்.. கருணாநிதி பக்கத்திலேயே மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி நிற்கிறார்.. அவருக்கு பக்கத்திலேயே ராகுல்காந்தி.. ராகுல்காந்தி பக்கத்தில் பிரதமர் மோடி நிற்கிறார்.. மோடிக்கு பக்கத்தில் எம்பி தயாநிதி மாறன் நிற்கிறார்.. அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் நிற்கிறார்.. அவருக்கு பக்கத்தில் எம்பி கனிமொழியும், கனிமொழிக்கு பக்கத்தில் சோனியாகாந்தி.. அவருடன் சந்திரலேகாவும், இவரையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நிற்கிறார்கள்..
வைகோ நச்
வைகோ பக்கத்தில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிற்கிறார்.. அதைவிட முக்கியம், அவரை "ஒட்டியபடியே" நின்றுகொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.. இப்படி மொத்த கட்சி தலைவர்களின் முழு உருவபோட்டோக்களையும் பதிவிட்டு, அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்று இந்த பேனர் அச்சடிக்கப்பட்டுள்ளது. "திருமண விழாவிற்கு வருகை தரும் அனைத்து கட்சி பிரமுகர்களையும் வருக வருக வருக என வரவேற்கிறோம்" என்று கோ.மா.காளிதரண் என்பவர் பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது..
தினகரன் எங்கே?
காளிதரண் நிஜமாகவே எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.. ஆனால், அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே பேனருக்குள் கொண்டுவந்து "நிறுத்தி", பலரையும் மலைக்க வைத்துள்ளார்.. 'அனைத்து கட்சி கூட்டம் கேள்விப்பட்டுள்ளோம், இதென்ன அனைத்து கட்சி கல்யாணம்? என்று காண்போர் வியந்து பார்க்கிறார்கள்.. ஆனால், பொண்ணு, மாப்பிள்ளைதான் யார் என்று தெரியவில்லை.. அவர்களின் போட்டோவும் அந்த பேனரில் காணப்படவில்லை.
விஜயகாந்த்
இணையத்தில் இந்த பேனர் வரவேற்பை பெற்று வந்தாலும், சிலர் இந்த போஸ்டரை பார்த்துவிட்டு, ஐயோ, என் தலைவன் சீமான் எங்கே? தினகரன் எங்கே? டாக்டர் ஐயாவை காணோமே? எங்க கேப்டன் இல்லாமல் கல்யாணமா? என்று உரிமையுடன் கேட்டு அந்தந்த கட்சிக்காரர்கள் தங்கள் தலைவர் குறித்து கேட்டு வருகிறார்கள். உரிமையுடன் தொண்டர்கள் கேட்கும் இந்த கேள்விக்கு, கல்யாண வீட்டுக்காரர் காளிதரண்தான் பதில் சொல்ல வேண்டும்..!!!!