ஆளுநர்களை விளாசிய உச்சநீதிமன்றம்: மே.வங்கம், கேரளா, ஜார்க்கண்ட் வரவேற்பு- அதிமுக, பாஜக கப்சிப்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தொடர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மேற்கு வங்கம், கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில கட்சிகளும் வரவேற்றுள்ளன. 'ஆளுநருக்கு தனிப்பட்ட வீட்டோ அதிகாரம் இல்லை- அரசியல்வாதியாக செயல்படக் கூடாது- மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்' என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து அதிரடி காட்டியது. ஆளுநர் என்பவர், மாநில சட்டசபைகளின் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுத்தாக வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் ஒன்று.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கேரளா முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றிருந்தார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என புகழ்ந்திருந்தார். அத்துடன் ஜனநாயகத்துக்கான வெற்றி என்றும் குறிப்பிட்டிருந்த பினராயி விஜயன், கேரளாவிலும் 23 மாதங்களாக ஆளுநர், மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்றுள்ளது. ஆளுநர்கள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக செயல்படக் கூடாது என்ற தீர்ப்பின் அம்சத்தையும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சுட்டிக்காட்டி இருக்கிறது. நாட்டின் கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு இது என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு, தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர்- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியும் அம்மாநில ஆளுநர் ஒப்புதல் தராமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநில அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் மிக மோசமாகவே இருக்கின்றன. மோடி அரசால் ஆளுநர் பதவி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது; தற்போது உச்சநீதிமன்றமானது தெளிவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது என்றார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் மஜூம்தார், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக ஆகியவை மட்டுமே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தெரிவிக்காமல் மவுனமாக இருக்கின்றன; ஆனால் இதர தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த தீர்ப்பைக் கொண்டாடித் தீர்க்கின்றன.












Click it and Unblock the Notifications