சபாஷ்.. பேரறிவாளன் விடுதலைக்கு தடையில்லை என்பதை உச்சநீதிமன்றம் உணர்த்தியுள்ளது: கு.ராமகிருஷ்ணன்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 32 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமின், அவரது தாய் அற்புதம்மாளுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து பேசியுள்ள அவர், "உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கிய செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் மக்கள் அனைவரும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பார்கள். ஆயுள் தண்டனையை விட அதிகமான காலம் பேரறிவாளன் அனுபவித்து வந்த இந்த தண்டனையில் அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கூட செவி சாய்க்காமல் மத்திய அரசு அவரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனுக்கும் அவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்த அவரது தாயார் அற்புதம்மாளுக்கும் கிடைத்த தற்காலிக வெற்றி. இந்த வெற்றி நிச்சயம் விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லும். பேரறிவாளனின் விடுதலைக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்ற கருத்தை தான் இந்த ஜாமின் மூலம் உச்சநீதிமன்றம் மூலம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் குரலாக உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கு பேரறிவாளன் ஜாமின் வழக்கு முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது. பேரறிவாளன் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கி இருக்கிறார். இது அவரது நீண்ட நாள் சட்டப்போராட்டத்துக்கும், தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கும் கிடைத்த வெற்றி." என்றார்.