சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்! ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு!
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமனம் செய்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வரநாத் பண்டாரி கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு வந்தார்.
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ராஜா
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
இந்த நிலையில் நீதிபதி துரைசாமி நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர் செப்டம்பர் 22ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி பிறப்பித்திருக்கிறார் என மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
நீதிபதி டி.ராஜா
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலக பணிகளை மேற் கொண்டு வரும் (பொறுப்பு தலைமை நீதிபதி) நீதிபதி எம்.துரைச்சாமி வரும் 21 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளூர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதி அலுவலக பணிகளை கவனிப்பார் ( பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார்) எனவும் நீதபதி ராஜா வரும் 22 ஆம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதிகளுக்கான பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கபட்டுள்ளது.
பின்னணி
நீதிபதி டி.ராஜா, மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் ஏம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்த நீதிபதி டி.ராஜா, சட்டபடிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரி முடித்து கடந்த 1988 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.
அடுத்த வரை பணி
பின்னர் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியாரக பணியை தொடங்கிய ராஜா பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தார். சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகள் நிபுணத்துவம் பெற்றுவர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 தேதி சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.