தமிழ் நடிகைக்கு டார்ச்சர்? கோடம்பாக்கம் சினிமாவில் பாலியல் புகார் வந்தால்? தமிழக அரசு பெரிய வார்னிங்
சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை, கேரளாவில் புயலை கிளப்பிவிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவிலும், பாலியல் தொடர்பான அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துவருகிறது. இதற்கு தமிழக அமைச்சர் சாமிநாதன், நம்பிக்கை மிகுந்த பதிலை தந்துள்ளார்.
மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையானது, தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதனால், மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மீது நடிகைகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத் (AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாக குழு பதவி விலகினார்கள்..
தலையீடுகள்: நடிகைகளுக்கான பாலியல் விவகாரத்தில், மாபியா கும்பல் தலையீடு இருப்பதாக அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்..
இன்றும்கூட, பிரபல நடிகை பார்வதி, ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நடிகர்கள் ராஜினாமா செய்தது கோழைத்தனமான செயல்.. இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பதவி விலகலாமா? இந்த விஷயம் குறித்து நடிகர்கள் சங்கம் அரசிடமாவது பேசியிருக்க வேண்டும். இதே நடிகர் சங்கம் தான் நடிகைகளை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் சங்கத்திற்கு வரவேற்றது.
மலையாள சினிமா: நான் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்துள்ளேன்.. அது எப்படியெல்லாம் செயல்படும் என எனக்கு தெரியும். இந்த விவகாரத்தில் பெண்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் பெண்கள் மீதே பழி சுமத்தப்படுகிறது. பெண்களின் வேலை குறித்து அல்லது மனநலம் குறித்து யாருமே கவலைப்படுவதில்லை..
ஹேமா கமிட்டி அறிக்கை முன்பாகவே வெளியாகியிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக போராட வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு பெண்ணும், தான் சந்தித்த கொடுமைகளை வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்" என்றார்.
அறிக்கைகள்: அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஹேமா கமிட்டி அறிக்கை தினந்தோறும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகிலும் பாலியல் தொடர்பான அழுத்தம் இருக்குமோ என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக நடிகர் விஷால் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. அதில், "தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்துள்ளார்கள். 20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள்.

புகார்கள்: யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூப்பிட்டால் அவர்களை அந்த பெண் செருப்பால் அடிக்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். சில கம்பெனிகள் பெண்களை போட்டோஷுட் எடுத்துவிட்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதி அளித்துள்ளார்.
கேரள சினிமா துறையில் பாலியல் புகார்கள் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழகத்தில் நடிகைகளுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் சாமிநாதனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள்.
நடவடிக்கை: அதற்கு அமைச்சர், கேரள திரையுலகை போல தமிழ் திரையுலகில் இதுவரை எந்தவித பாலியல் தொடர்பான புகார்களும் வரவில்லை என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அப்படி புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications