1000 பேருடன் "ஆவேசமாக" வந்த ஜி.கே.வாசன்.. தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்.. பரபரத்த வள்ளுவர் கோட்டம்
சென்னை: ஆட்சி பொறுப்பேற்ற உடன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கடந்த ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறியே திமுக அரசு தப்பித்து வருவதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
மேலும் ஆட்சி மாற்ற முடிவு மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் என்று ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.

1000 பேர்
இதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசுகையில், த.மா.க சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் கோட்டையில் உள்ளவர்கள் காதில் விழுந்துள்ளது, உள்ளாட்சி தேர்தலில் த.மா.க வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மாவட்டங்களில் போராட்டம்
மேலும், சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தான் மக்கள் நம்பி வாக்குகளை அளித்தார்கள். ஆனால், அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

தப்ப பார்க்கிறது அரசு
திமுக அரசு கடந்த ஆட்சி மற்றும் மத்திய அரசை குறை கூறி தனது வாக்குறுதிகளில் இருந்து தப்பித்து வருகின்றனர். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். தேர்தலுக்கு முன்பு, பதவிக்கு வந்த உடன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு, தற்போது 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறுவது ஏற்க முடியாது.

நிதி பற்றாக்குறை தெரியாதா
தற்போது நகரம் முதல் கிராமம் வரை, திமுக வாக்குறுதிகளை நம்பி மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர், வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம்? நிதி இல்லை என்று கூறும் அரசுக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிதி பற்றாக்குறை பற்றி தெரியாதா?

தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்
ஆட்சி மாற்ற முடிவு மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. மேகதாது அணை கட்ட ஒரு போதும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது. டெல்டா பகுதிகளில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி த.மா.க விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்த்துவோம். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம் தான், தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஸ் விலை பற்றி பேசவில்லை
பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார் வாசன்.
தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறதே என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications