டமால், டுமில்.. டிச 21, 22ல் தமிழக 10 மாவட்டங்களில் இடியுடன் கொட்டும் கனமழை.. உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் 21, 22ம் தேதிகளில் மழை பெய்யும் எனவும், 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையின் அடுத்த 48 மணிநேர காலநிலை என்னவாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்து கூறி உள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் இறுதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து மழை நிலவரங்களை கணித்து கூறி வருகிறது.
அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

டிசம்பர் 20 வரையிலான நிலவரம்
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 20ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 21ல் 9 மாவட்டங்களில் கனமழை
டிசம்பர் 21ல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

டிசம்பர் 22ல் 10 மாவட்டங்களில் கனமழை
டிசம்பர் 22ல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் சென்டிமீட்டரில் மழை அளவு பதிவாகவில்லை.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று : அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 20 முதல் டிசம்பர் 22 வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications