‘விஸ்தாரக்’ இது லிஸ்ட்லயே இல்லையே? உணவு,தங்குமிடம், ஊதியம்! உபி மாடலை தமிழகத்தில் கொண்டு வந்த பாஜக!
சென்னை : இந்தியா முழுமைக்கும் மிகப்பிரம்மாண்டமான வெற்றி பெற்ற கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளது. இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது இருப்பை காட்டிக் கொள்வதற்காக உபி குஜராத்தில் கை கொடுத்த திட்டத்துடன் தமிழக பாஜக களம் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக பல்வேறு பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த தேர்தல்களில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகச் சொற்ப அளவிலேயே வெற்றி கிடைத்தது.
தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் தோல்வியடைந்த நிலையில் நான்கு பேர் மட்டும் சட்டமன்றத்திற்கு தேர்வாகினர்.

பாஜக
குறிப்பாக வானதி சீனிவாசன், காந்தி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களாக அமர்ந்தனர். அதே நேரத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் படுதோல்வியை சந்தித்தனர். உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவில் பாஜக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளை கைப்பற்றாத நிலையில் அடுத்ததாக மாநிலங்களவை தேர்தலை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது.

மக்களவை தேர்தல்
இதற்காக வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட பேச்சு வார்த்தைகள் தொடங்கவில்லை. காரணம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் அதனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தமிழக பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. இதனிடைய தமிழகத்தில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்காக அண்ணாமலை பல தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

பிரதமரின் தமிழக வருகை
ஆனால் தேர்தல் வேலைகளை தொடங்கவில்லை என்பதெல்லாம் வெளிப் பேச்சுதான் எனவும் நாடாளுமன்ற தேர்தலை மையமாகக் கொண்டு பாஜக பல நாட்களுக்கு முன்னரே வேலையைத் தொடங்கி விட்டது எனவும், பல பணியாளர்களும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அடுத்தடுத்து பிரதமரின் தமிழக வருகை, அமித் ஷா வருகை, மத்திய அமைச்சர்களின் ஆய்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் இந்த நிகழ்வுகள் என்கின்றனர் தமிழக பாஜகவினர்.

அதிமுக
தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சதவீத வாக்குகளுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் பாஜக 30 சதவீத வாக்குகளுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் தோளை பற்றியே தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. என்னதான் எடப்பாடி பழனிச்சாமி முரண்டு பிடித்தாலும் இறுதியில் பாஜக அதிமுக கூட்டணி அமையப்போவது உறுதி தான் இதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழக பாஜக
இது ஒரு புறம் இருக்க கூட்டணி தொடர்பான வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் தேர்தல் தொடர்பான வேலைகளை நீங்கள் ஆரம்பியுங்கள் என பாஜக தமிழக தலைமைக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இதனை அடுத்து நாடாளுமன்ற வேலைகளை தமிழக பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் அணி தலைவர்கள் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் வரை நியமனங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு பெயர் சேர்க்கையும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

விஸ்தாரக்
அதேபோல பூத் கமிட்டி அமைக்கும் பணிகளும் படு வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் மாவட்டத் தலைவர்கள். இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் விஸ்தாரக் எனப்படும் தேர்தல் முழு நேர பணியாளர்களை நியமிக்கும் பணி சூடு பிடித்திருக்கிறது. உத்திரபிரதேசம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கென்று பாஜகவுக்காக முழு நேரமாக பணியாற்றும் ஊழியர்கள் தான் விஸ்தாரக் என அழைக்கப்படுகின்றனர். பல மாநில தேர்தல்களில் இந்த யுக்தி அக்கட்சிக்கு கை கொடுத்திருக்கிறது. குஜராத்தில் இவர்களின் பணி மிக மகத்தானது.

என்ன வேலை?
இவர்களுக்கு ஊதியம் தங்குமிடம் உணவு உள்ளிட்ட அனைத்தும் கட்சி சார்பிலேயே வழங்கப்படும் இவர்கள் பூத் கமிட்டி அமைப்பது தேர்தல் வேலைகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து தலைமைக்கும், தலைமை தரும் ஆலோசனைகளை உள்ளூர் கட்சி பிரமுகர்களுக்கும் வழங்குவார்கள் என்கின்றனர் பாஜகவினர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு விஸ்தாரக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கும் நியமன பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகளில் தேர்தல் பொறுப்பாளர்கள் போல் அல்லாமல் கட்சிப் பணியை மட்டுமே இவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் இது வருகின்ற தேர்தலில் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications