இதுக்கு பருத்தி மூட்டை பேசாம கொடோன்லேயே இருக்கலாமே.. பஸ் இயக்கத்தில் குளறுபடி.. மக்கள் அதிருப்தி!
சென்னை: பேருந்துகள் இயக்கும் விஷயத்தில் அரசின் குழப்பமான அறிவிப்பு மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மாவட்ட எல்லையில் இறக்கிவிட்டு வேறு பஸ்ஸில் செல்ல வைப்பதற்கு பதில்.. மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்கலாமே.. என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மார்ச் 24ம் தேதி நள்ளிரவு கொரோனா ஊடங்கு மத்திய அரசு அறிவித்ததால்பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு ஜூன் மாதத்தின் போது இடையில் மண்டலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து கழகம் மூலம் சாதாரண, டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் என்ற வகைகளில் தினசரி 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் எண்ணிக்கை வேறு தனியாக உள்ளது.
இந்தியாதான் லடாக்கில் அத்துமீறுகிறது.. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம்.. சீனா பாய்ச்சல்!
குறைந்த பேருந்துகள்
அரசு மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளால் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது. மாவட்டம் விட்டுமாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் இந்த அறிவிப்பால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று கூறப்படுகிறது.
அரசு தயக்கம் ஏன்
மாவட்ட எல்லையில் பேருந்துகளை நிறுத்தி இறக்கிவிட்டு அரசு பேருந்துகள் சென்றுவிடுகின்றன. இதனால் மக்கள் அந்த எல்லையில் இருந்து நடந்து சென்று அடுத்த மாவட்ட எல்லையில் உள்ள பேருந்தில் ஏறும் நிலை உள்ளது. இ பாஸ் இல்லை என்று அரசு அறிவித்துவிட்டதால், அப்புறம் எதற்காக மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பேருந்துகளை இயக்க அரசு தயங்குகிறது என்று கேள்வி எழுகிறது.
எவ்வளவு அலைச்சல் வரும்
அரசு இந்த வித்தியாசமான சிக்கலான நடைமுறையை கடைபிடிப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு மாவட்ட எல்லையையும் கடந்து பேருந்தில் செல்வது என்பது மிகவும் கடினமாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் மதுரையில் இருந்து வேலைக்கு செல்ல திருப்பூர் பயணிக்க விரும்பினால். மதுரை மாவட்ட எல்லையில் இறங்க வேண்டும். அதன்பிறகு திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு வநது மீண்டும் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுககல் செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் திருப்பூர் மாவட்ட எல்லையான ஒட்டன் சத்திரம் தாண்டி உள்ள பகுதிக்கு வர வேண்டும். அங்கிருந்து மீண்டும் தாராபும் சென்று, திருப்பூர் செல்ல வேண்டும். இதேபோல் தான் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அரசு பரிசீலிக்க வேண்டும்
எனவே அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் எப்படியும் காரில் சென்று விடுவார்கள். ஆனால் ஏழை மக்களால் குடும்பமாக வேலைக்கோ, அத்தியாவசிய தேவைக்கோ கார் பிடித்து செல்ல முடியாது. எனவே அரசு இந்த நடைமுறையில் தளர்வுகளை அறிவித்து அனைத்து மாவட்டத்திற்கும் பேருந்துகள் செல்ல அனுமதி அளிக்க வேணடும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.