முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவது உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் மீது முடிவெடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நான் ராசிக்காரன் இல்லை! எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது! உதயநிதி ஸ்டாலின் பளிச்!
அமைச்சரவைக் கூட்டம்
பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியிருப்பதால் அதில் என்னவெல்லாம் விவாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான டேவிதார் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை உட்பட இன்னும் பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகுந்த முக்கியத்துவம்
இதேபோல் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஏற்கனவே கருத்துக் கேட்பு நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவசரச் சட்டம் கொண்டு வருவது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முதல்வர் அமைச்சர்களுடன் விரிவாக விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விசாரணை அறிக்கைகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
தொழில் திட்டங்கள்
இதனால் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி உட்பட தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பற்றி பிரதானமாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும் முதல்வர் இந்தக் கூட்டத்தில் சூசகமாக பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேதி மாற்றம்
தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது நாளை நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்றே நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.