”புதிய சகாப்தத்தின் தொடக்கம்” ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: ஓணம் பண்டிகையைடிட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்தி உள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் திருவிழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் கொண்டாடப்பட இருக்கிறது.
நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள் என குறிப்பிட்டிருந்தார்.

மலையாளத்தில் வாழ்த்திய முதல்வர்
இந்த நிலையில் ஓணம் பண்டிகையான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஒணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில், மகாபலி மன்னனை மலர்களால் வரவேற்கும் அனைத்து மலையாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எத்தனை கதைகள் புனைந்தாலும் சன்மார்க்க அரசனை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது..!

திராவிடர்களுக்கு இடையிலான தொடர்பு
கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள். ஓணம் பண்டிகை புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிப்பதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இது திராவிடர்களுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்பை காட்டுகிறது. கருத்து வேறுபாடுகளை கலைந்து உறவை வலுப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் வரவேற்பு
அண்மைக் காலமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருக்கமான நட்பை தொடர்ந்து வருகிறார். அண்மையில் மனோரமா ஊடக கருத்தரங்கு நிகழ்ச்சியில் மலையாளத்தில் உரையாற்றி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். தற்போது ஓணம் பண்டிகையையொட்டி மலையாளத்தில் வாழ்த்தியுள்ளது மலையாள மொழி பேசும் மக்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications