உங்களுக்காக ஒரு சகோதரன் இருக்கிறேன்.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நெகிழவைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : சென்னையை மறந்துவிட வேண்டாம், உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கமல்ஹாசனின் 'கணீர்’ குரல்.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் புல்லரிக்க வைத்த சம்பவம்.. பிரம்மிப்பு!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பதக்கங்கள்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் கருப்பு சூட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தனி நபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. 5 போர்டுகளில் ஓபன், பெண்கள் என்று 30 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் தனிநபர் போர்டு பிரிவில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
உலகமே மெச்சத்தக்க வகையில்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "குறுகிய காலத்தில் வெறும் நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். உலகமே மெச்சத்தக்க அளவில் தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் உயரும். 4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, வியக்கும் வண்ணம் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.102 கோடி ஒதுக்கி 18 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அமைச்சர் உட்பட அதிகாரிகள் வரை அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.
எனக்கு அதிக மகிழ்ச்சி
சென்னையில் தங்கியிருந்த நாட்களை வெளிநாட்டு வீரர்கள் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன். தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன். வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
சென்னையில் நடத்த முயற்சி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் பதங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
வெற்றி தோல்வி முக்கியமல்ல
கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். விளையாட்டுத்துறை முன்னிலும் அதிக பாய்ச்சலுடன் செயல்படும், எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்.
ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்
செஸ் விளையாட்டுப் போட்டி அதற்குள் முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே, தமிழ்நாட்டுக்கு நீங்கள் எப்போதும் வரலாம். சென்னையை மறந்துவிட வேண்டாம். உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்" என நெகிழ்ச்சியாகப் பேசினார்.