ரெடி, ஸ்டார்ட்.. தமிழ்நாட்டில் பஸ் போக்குவரத்து எப்போது.. கலெக்டர்களிடம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் பஸ் போக்குவரத்து துவங்குவது பற்றி இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் குறைவாக தரப்பட்டுள்ளன.
கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வு வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வு
நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. டாஸ்மாக் மதுபான கடைகள் 27 மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ளன. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. டீ கடைகள் திறக்கப்பட்டு பார்சல் சேவை வழங்கப்படுகிறது. பூங்காக்கள் திறக்கப்பட்டு காலை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு
இனிமேல் பள்ளிகள் திறக்க வேண்டியது மற்றும் பஸ் உள்ளிட்ட பொது பொது போக்குவரத்து சேவைகளை அனுமதிக்க வேண்டியது, மாவட்டங்களிலேயே இ பதிவு நடைமுறையை நீக்க வேண்டியது ஆகியவைதான் பாக்கி. இது தொடர்பாக இன்று காணொலிக் காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
நோய் பரவல் குறைக்க வாய்ப்பு
காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்க உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டதன் காரணமாக, மக்கள் அதிக அளவுக்கு வெளியே வருவதால் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
ஸ்டாலின் வீடியோ
நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை, சரியாக கடைபிடிக்க வேண்டும், விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை பிறப்பித்திருந்தார். எனவே மக்கள் கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க கலெக்டர்களுக்கு அவர் அறிவுறுத்துவார் என்று தெரிகிறது.
போக்குவரத்து துவக்கம்
பள்ளிகள் திறக்கப்பட வேண்டும், போக்குவரத்து துவங்கப்பட வேண்டும், இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் மக்கள் உரிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று தனது வீடியோவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இரு விஷயங்களிலும் முதல்வர் கவனம் செலுத்துகிறார் என்பது இந்த வீடியோ மூலமாக உறுதியாக தெரிகிறது.
கலெக்டர்கள் ஆலோசனை
இன்றைய கூட்டத்தில் பெரும்பாலான கலெக்டர்கள், ஒப்புக் கொண்டால், பஸ் போக்குவரத்து துவங்கபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், பள்ளி திறப்பு இப்போதைக்கு இருக்காது என்கிறார்கள் கல்வி அமைச்சக வட்டாரத்தில்.
அதிகாரிகள்
இன்று நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை முதல்வருக்கு வழங்க உள்ளார்கள்.