பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்து பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கிண்டி ராஜ்பவனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநருடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக ஆளுனர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என மத்திய அரசின் சிபிஐ வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் விடுதலை தொடர்பான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும். வழக்கை 2 வாரம் தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் இன்று முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
பிப்ரவரி 2ஆம் தேதி, தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் நேரடியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
ஆளுநர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் பேசியதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநருடன் ஆலோசித்தார் என்று கூறிய அமைச்சர், நல்ல முடிவை எடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாகவும், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.