ஜிஎஸ்டி வரி பாக்கியை வசூலிக்க நிதி நிபுணர் குழு அமைக்கப்படும்: பட்ஜெட்டில் பிடிஆர் அறிவிப்பு
சென்னை: ஜிஎஸ்டி நிலுவை வரியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையை தொடங்கி வைத்தார்.
இதில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி
பல்வேறு தேசிய நிகழ்வுகளால் தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டதை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியது. தற்போது நிறைவுற்ற, 15வது நிதிக்குழு உட்பட இந்தியாவில் அடுத்தடுத்த நிதிக்குழு முடிவுகள் இதற்கான காரணமாகும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசு விதிக்கும் மேல் வரி, போன்றவற்றால் மத்திய அரசின் வரி 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாகி விட்டது.

கூட்டாட்சி தத்துவம்
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டதை வெள்ளை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிவிதிப்பு முறையில் மத்திய அரசு கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகும் வகையில் செயல்படுகிறது.

பெட்ரோல், டீசல் வரி
பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் 35 பைசா என்று இருந்தது. இப்போது 32 ரூபாய் 90 பைசாவாக உயர்த்தி விட்டார்கள். 2014ஆம் ஆண்டு மே மாதம் டீசல் மீதான வரி மூன்று ரூபாய் 57 பைசா என்ற அளவில் இருந்தது. அது இப்போது 31 ரூபாய் 80 பைசா என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

மாநில பங்கு குறைகிறது
மத்திய அரசின் மேல் வரி, கூடுதல் கட்டணங்கள் அதிகரிக்கும் அதே வேளையில் மாநில பங்கு பெருமளவு குறைக்கப் பட்டது. 2019-20ம் நிதி ஆண்டை ஒப்பிடும்போது 2020-21 ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக மத்திய அரசுக்கு வருவாய் 63% அதிகரித்தாலும் மாநிலங்களுக்கான பங்கு சரிவடைந்தது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் மக்களுக்கு, நியாயமான தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் மற்றும் குறிப்பிட்ட நோக்கத்துக்காக மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல் வரிகள் முழுமையாக குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை. குறிப்பிட்ட காலத்தில் விதிக்கப்படும் கூடுதல் வரிகள், காலவரையின்றி தொடர்கிறது என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாட்சி நிதி வடிவம்
இதை முழுமையாக எதிர்கொள்வதற்கும் புதிய மற்றும் விரிவான அணுகுமுறையை முன் மொழிவதற்கும், ஜிஎஸ்டி உட்பட கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்காக இது தொடர்புடைய பொருளாதார நிபுணர்கள், வல்லுனர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை இந்த அரசு நிறுவும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
Recommended Video

இ பட்ஜெட்
இந்த பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16ம் தேதி தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications