தமிழகம்.. நாளை முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்.. மொத்த மார்க்கெட்டுகளை திறக்க அனுமதி
சென்னை: தமிழகத்தில் 2வது கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் தரப்பட்டுள்ளன. அதன்படி, கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24ம் தேதி முதல் 31ம் தேதியான இன்று வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தியது அரசு.
இந்த ஊரடங்கை 7-ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி 2ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதால் மக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல சலுகைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கூடுதலாக சில சலுகைகள் தரப்பட்டுள்ளன.
ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.. எவற்றுக்கு தடை? எவையெவை இயங்கும் தெரியுமா?
மருந்தகங்கள்
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதை பாருங்கள்:
ஆங்கில மற்றும் நாட்டு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், செல்லப்பிராணிகளுக்கான தீவன விற்பனையகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள்
பால், குடிநீர் மற்றும் பத்திரிகைகள் வினியோகம் செய்ய அனுமதியுள்ளது. வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப்பொருட்களை அனுமதியுடன் விற்பனை செய்யலாம். ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மளிகைப்பொருட்கள் ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதியுள்ளது.
ஹோட்டல்கள் திறப்பு
ரேஷன் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரை இயங்கும். பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்படலாம். கேஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு அனுமதி உண்டு. ஓட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 1 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என மூன்று வேளையும் பார்சல் சேவை வழங்கலாம்.
கோயம்பேடு மார்க்கெட்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 8 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். கோயம்பேடு உட்பட காய்கறி, பழம், பூ மொத்த மார்க்கெட்டுகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம், மொத்த மார்க்கெட்டுகளில் உள்ள சில்லறை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. ரயில்கள், விமானம், கப்பல் துறைமுக இயக்கம் அனுமதிக்கப்படுகிறது. மின்சாரம், குடிநீர், சுகாதாரப் பணிகள், தொலைத்தொடர்பு, தபால் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன.
வங்கிச் சேவை
அத்தியாவசிய சேவைகளுக்காக தலைமைச்செயலகம், மருத்துவம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதிச் சந்தைகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்கலாம்.
ரயில் நிலையம் போகலாம்
கால்நடை, கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பண்ணைகள் இயங்க அனுமதி உண்டு. வீட்டில் இருந்து விமானம் அல்லது ரயில் நிலையங்கள் செல்வதற்கும், அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்கும் பயணம், பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ பதிவு இருந்தால் அனுமதி அளிக்கப்படும்.
சில மாவட்டங்களில் தடை
அத்தியாவசியப் பொருட்கள் தயாரிப்பு, தொடர் இயக்க தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி ஆர்டர்களை மேற்கொள்ளும் வகையில், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இதற்கு அனுமதியில்லை.
தடுப்பூசி போட வேண்டும்
தொழிற்சாலைகள் ஒரு மாதத்துக்குள் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். ஹோட்டல்கள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டிருந்தால், அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அளித்த அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்.
தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்கள் கொண்டுசெல்வோர் உரிய இ-பதிவு அடிப்படையில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இ பதிவு அவசியம்
மாநிலங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்துக்குள்ளும் தனிநபர்கள் மருத்துவ அவசரங்கள் மற்றும் இறப்பு, இறுதிச்சடங்குக்கு செல்வதற்கு இ-பதிவு அவசியம். அதேபோல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மூலம் வருவோர் இ-பதிவு மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் எவ்வித தளர்வுகளும் கிடையாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.