ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாமா? பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் தமிழக அரசு!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாமா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
இந்தக் கருத்துக் கேட்பு நிகழ்வில் நீங்களும் பங்கேற்று ஆன்லைன் சூதாட்டம் குறித்த உங்கள் கருத்தை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரியில் 12.08.2022க்குள் தெரிவிக்கலாம்.
மேலும், இது தொடர்பான விவரம் வருமாறு;

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது / ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

சமூக ஒழுக்கம்
வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அவசரச் சட்டம்
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

மின்னஞ்சல் முகவரி
ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது / ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது / ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், தங்களுடைய கருத்துகளை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரியில் 12.08.2022க்குள் தெரிவிக்கலாம்.
Recommended Video

நேரிலும் தெரிவிக்கலாம்
ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க, 09.08.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். கருத்துக் கேட்புக் கூட்டம் 11.08.2022 அன்று மாலை 04.00 மணி முதல் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கு பெறலாம்.












Click it and Unblock the Notifications