தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சாட்டையை சுழற்றுமா அரசு? லாக்டவுனில் வருகிறதா கூடுதல் கட்டுப்பாடு?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள நிலையில் அரசு தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலை, படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கடந்த சில வாரங்களாக பல்வேறு மத விழாக்கள் மற்றும் தொடர்ந்து நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கண்காணிப்பு இல்லாத நிலைதான் தமிழகம் முழுக்க இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு
இதன் காரணமாக கொரோனா நோய் பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் கோவையில் ஒரு நாள் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு 200க்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழக அரசு இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சுகாதாரத் துறை மட்டுமல்லாது உளவுத் துறையிடம் இருந்தும் கள நிலவரம் என்ன என்பது குறித்த தகவல்களை அரசு சேகரித்து வருகிறது. சுகாதார துறை அமைச்சகத்துக்கு இந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

மக்கள் கூட்டம்
சென்னை மற்றும் கோவை ஆகியவை தமிழகத்தில் பெரிய நகரங்களில் முக்கியமானவை. மக்களடர்த்தி மிகுந்தவை. எனவே, இங்கு மக்கள் பெரும் அளவுக்கு கூட கூடிய இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதை தடுக்க வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்துவது பரவலாக்கப்பட வேண்டும் என்பதுதான் உலகம் முழுக்கவும் சுகாதாரத் துறை வல்லுனர்கள் கூறக்கூடிய அறிவுரையாக இருக்கிறது. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் வேகத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சமூக இடைவெளி இல்லை
கொரோனா நோய் பாதிப்பு என்றால் என்ன என்றே மறந்து போய் முககவசம் கூட அணியாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதை தமிழகத்தில் பார்க்க முடிகிறது. வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளி பாரமரிக்கப்படுவதில்லை. மொட்டை போடும் இடங்களில் கூட மக்கள் முண்டியடித்து நிற்பதை பார்க்க முடிகிறது. மொட்டை போடுபவருக்கு நோய் பரவல் ஏற்பட்டால், அவரால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. இங்கெல்லாம் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை பல திருத்தலங்களில் பார்க்க முடிகிறது. கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் மட்டுமல்லாது நகரப் பகுதிகளிலும் மக்களிடம் மெத்தன போக்கு அதிகரித்துள்ளது . இதை தடுப்பதற்கு தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழிசை உத்தரவு
புதுச்சேரியை பொருத்தளவில் பண்டிகைக்கான அரசின் சலுகைகள் பெற வேண்டுமென்றால் தடுப்பூசி கட்டாயம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அவர் அறிவித்துள்ளார். இதே பாணியை பின்பற்றி தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்துவதில் கடுமை காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதை இந்த கேஸ் அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது.

கடும் நடவடிக்கை
அரசு கொடுக்கும் சலுகைகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கு தானே தவிர திருமணம் உள்ளிட்ட பிற விஷயங்களில் கூட்டம் கூடி நோயை பரப்புவதற்கு அல்ல என்ற விழிப்புணர்வு பெரும்பாலான மக்களுக்கு இல்லாமல் இருக்கிறது. போர்கால அடிப்படையில் மக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடியாக அந்தந்த இடங்களில் அபராதம் விதிக்க செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications