சட்டசபை விவகாரம்..ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்..அமித் ஷாவிடம் பேசப்போவது என்ன?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலையில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சட்டசபையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை விட்டும் தூறல் விடாத குறையாக சட்டசபை சம்பவங்கள் தொடர்கதையாக நீடித்து வருகிறது. கடந்த வாரம் ஆளுநர் ரவி சட்டசபை மரபுப்படி உரை நிகழ்த்தி 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை தொடக்கி வைத்தார். அப்போது ரவி தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்த சில வார்த்தைகள், பாராக்களை வாசிக்காமல் தவிர்த்து விட்டார்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் படி ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இடம்பெற செய்யவில்லை. மாறாக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கடந்த 12ஆம் தேதி சந்தித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரை நாங்கள் சந்தித்தோம். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக கடந்த 13ஆம் தேதியன்று டெல்லி சென்று திரும்பினார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
இதனிடையே திமுக எம்.பிக்கள் அளித்த புகார் தொடர்பாக ஆளுநர் ஆர். என் ரவி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை கேட்டார். பொதுவாக குடியரசுத் தலைவர் இது போன்ற விவகாரங்களில் தாமாக முடிவு எடுக்க மாட்டார். அவர் உள்துறையிடம் ஆலோசனை கேட்டு நடப்பார். அவர்கள் சொல்வதைத்தான் பெரும்பாலும் செய்வார். இந்த நிலையில்தான் ஆளுநர் ரவிக்கு எதிரான புகார் குறித்து உள்துறையிடம் குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டார். இந்த விவகாரம் தற்போது உள்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. இந்த நிலையில்தான் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, தமிழக சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடுகளில் வாழ்க தமிழ்நாடு என்று கோலமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு சாதனைகளை படைக்கவேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி