மியான்மரில் தவிக்கும் தமிழர்கள்.. விமான செலவை நாங்களே ஏற்கிறோம்.. மத்திய அரசுக்கு தமிழக அரசு தகவல்
சென்னை: மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உலகின் பல நாடுகளுக்கு சென்று வேலைகள் செய்து வருகின்றனர். கூலி வேலை உள்பட ஐடி உள்பட பிற நிறுவனங்களில் ஊழியர்கள், அதிகாரிகளாக ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.
“காப்பாத்துங்க” - கதறும் தமிழர்கள்.. “மியான்மரில்” சித்திரவதை! காரணம் “வேலையின்மை” - வேல்முருகன்
ஐடி பணி எனக்கூறி...
இந்நிலையில் தான் ஐடி வேலை எனக்கூறி தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஒரு கும்பல் தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறியது. இதை நம்பிய இளைஞர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் அந்த கும்பலர் இளைஞர்களை ஏமாற்றி மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
பிணை கைதிகள் போல்
மியான்மரின் மியவாடி என்ற பகுதில் சிறை வைத்து இளைஞர்களை சட்டவிரோத செயலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. அதாவது ேஹக்கிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தினமும் 15 மணிநேரம் மற்றும் அதற்கு அதிகமான நேரம் வேலை செய்ய வற்புறுத்தி துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஏறக்குறைய அவர்களை பிணைகைதிகளாக அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இங்கு 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வகிக்கும் தமிழர்கள் தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 300 பேரை தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே 17 தமிழர்கள் மாநில அரசுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து செலவை ஏற்கிறோம்
இந்நிலையில் மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாய்லாந்து அழைத்து வரும் பட்சத்தில் அங்கிருந்து மீட்பதற்கான போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்க தயாராக இருப்பதாக தமிழக அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.