"வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு மீண்டும் டெஸ்டிங்.."சொல்கிறார் அமைச்சர் மா.சு! காரணம் மங்கி பாக்ஸ்
சென்னை: குரங்கு அம்மை பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெருவில் புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதேபோல சைதாப்பேட்டை பகுதியில் முழுக்க பல இடங்களில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை அமைச்சர் மா.சு தொடங்கி வைத்தார்.

மா. சுப்பிரமணியன்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் அலங்கோலப்படுத்திவிட்டனர். நகரில் இருக்கும் நடைபாதைகளை அகலப்படுத்துகிறோம் என்று கூறு மழைநீர் வடிகால்களை மூடிவிட்டனர். இதன் காரணமாகவே கடந்த பருவமழை சமயத்தில் தியாகராயர் நகர் , மாம்பலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

பருவமழை
இந்த ஆண்டு பருவமழை சமயத்தில் மீண்டும் அத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது மழை நீர் வடிகால்கள் சீரமைப்பு, தேவையான பகுதிகளில் புதிய வடிகால்கள் அமைப்பது ஆகிய பணிகளைத் தொடங்கி உள்ளோம். வரும் காலத்தில் மழை சமயங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மழைநீர் தேங்கும் நிலையைத் தவிர்க்கத் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மக்களை தேடி மருத்துவம்
கிங்ஸ் இன்ஸ்ட்டியூட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள முதியோர் சிகிச்சை மருத்துவமனை கட்டிடத்தின் தரத்தை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு ஆய்வு செய்கிறது. அவர்கள் தரும் ஆய்வு அறிக்கை அடிப்படையில் கான்ட்ராக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். வரும் 12ஆம் தேதி மாநிலத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மாநிலத்தில் இதுவரை 1.63 லட்சம் பேர் முதல் டோஸ் வேக்சின் போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

மங்கி பாக்ஸ்
மங்கி பாக்ஸ் நோய் பாதிப்பைக் கண்டு நாம் அஞ்ச தேவையில்லை. அது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கு அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். இப்படி தான் பிரிட்டன் நாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு முகத்தில் கொப்பளம் போன்று இருந்தது. அவருக்கு மங்கி பாக்ஸ் சோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. எனவே தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
Recommended Video

மங்கி பாக்ஸ் என்றால் என்ன
மங்கி பாக்ஸ் எனப்படும் இந்த வகை வைரஸ் பாதிப்பு வேகமாக உலக நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே கண்டறியப்படும் இந்த மங்கி பாக்ஸ், இப்போது ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 12 நாடுகளில் பரவுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என மொத்தம் 100 கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications