ஸ்டாலின் அமைச்சரவை.. கவுண்டர், முக்குலத்தோருக்கு தலா 4, வன்னியருக்கு 3.. பல சமூகத்திற்கு சம வாய்ப்பு
சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில், பல்வேறு ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அதிமுக அமைச்சரவையை போலவே, முக்குலத்தோர் மற்றும் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
அனைத்து மண்டலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம்.. கலக்கும் ஸ்டாலின் அமைச்சரவை
ஜாதிவாரியாக யார், யார் அமைச்சர்கள் எந்தெந்த துறை அமைச்சர்கள் என்பதை இதோ பாருங்கள்.
வன்னியர்
முதல்வர், ஸ்டாலின் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரும் வன்னியர்.
கொங்கு வெள்ளாள கவுண்டர்
முத்துசாமி - வீட்டுவசதி, மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை, சக்கரபாணி - உணவுத்துறை, செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகியோர் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேந்தவர்களாகும். அதாவது கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியிலிருந்து 4 பேர் அமைச்சராக்கப்பட்டுள்ளனர்.
ரெட்டி, நாயுடு
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய், கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம் ஆகியோர் ரெட்டியார் ஜாதியைச் சேர்ந்தவர்களாகும். எ.வ.வேலு - பொதுப்பணித்துறை, ஆர்.காந்தி - கைத்தறி, சேகர்பாபு -அறநிலையத்துறை ஆகிய 3 பேரும் நாயுடு ஜாதியைச் சேர்ந்தவர்களாகும்.
காந்தி கம்மவார் நாயுடு பிரிவையும், சேகர் பாபு, பலிஜா நாயுடு பிரிவையும், எ.வ.வேலு போயர் நாயுடு பிரிவையும் சேர்ந்தவர்கள்.
முக்குலத்தோர்
முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாகிறார்கள். ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை, தங்கம் தென்னரசு - தொழிற்துறை, பி.மூர்த்தி - வணிகவரி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிகல்வி ஆகியோர் முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்தவர்களாகும். இதில் தங்கம் தென்னரசு மறவர் பிரிவையும், மற்ற மூவரும் கள்ளர் பிரிவையும் சேர்ந்தவர்கள்.
நாடார்
நாடார் சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நாடார் ஜாதியினராகும். இவர்கள் முறையே, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்றவர்களாகும். அதாவது 3 பேருமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து நாடாராகும். மற்ற இருவரும் கிறிஸ்தவ நாடார்கள்.
யாதவர், முதலியார்
பெரியகருப்பன் - ஊரகவளர்ச்சி, ராஜகண்ணப்பன் - போக்குவரத்து ஆகிய இருவரும் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தா.மோ.அன்பரசன் - ஊரக தொழிற்துறை (செங்குந்தர்), பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை ஆகிய இருவரும் முதலியார் சமூகத்தினர்.
முஸ்லீம்கள்
இதேபோல மத சிறுபான்மையினரான முஸ்லீம்கள் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஆவடி நாசர் -பால்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உருது முஸ்லீமான மஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகிறார்.
ஆதி திராவிடர்
சி.வி.கணேசன் - தொழிலாளர் நலம்- இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகும். சுற்றுலாத் துறை அமைச்சரான மதிவேந்தன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பல்வேறு சமூகம்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். சட்டத் துறை அமைச்சர் கோ.ரகுபதி செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர். வனம் சார்ந்த சமூகத்திலிருந்து வந்த அவருக்கு வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.
மீனவர், முத்தரையர்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். சுற்றுச் சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மெய்யநாதன் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவராகும். ஆக மொத்தம், தமிழகத்தில் பெருவாரியாக உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அமைச்சரவையில் கணிசமான இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.