லோக்சபா தொகுதி குறைப்புக்கு ஈடு.. தமிழகத்தில் 2 ராஜ்யசபா எம்.பி.க்களை அதிகரிக்கலாம்: உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதற்கு ஈடாக இரண்டு ராஜ்யசபா தொகுதிகளை அதிகரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.தனித் தொகுதியாக உள்ள தென்காசி லோக்சபா தொகுதியை பொது த் தொகுதியாக மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், தமிழக லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
நீதிபதிகளின் கருத்து இதுதான்: 1962ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 41 மக்களவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

2 தொகுதிகள் குறைந்தன
1967ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதல், தொகுதி மறுசீரமைப்பின் கீழ் இந்த தொகுதிகள் எண்ணிக்கை 39ஆக குறைக்கப்பட்டது. இரு தொகுதிகள் குறைக்கபடுவதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாட்டில் மக்கள்தொகை விகிதம் குறைந்தது என்பதுதான். மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியது. ஆனால், இதை காரணமாக வைத்து 2 லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது மற்றும் காரணம் இல்லாதது.

பாராட்டுதானே கிடைக்க வேண்டும்
மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் பொதுவாக பாராட்டப்பட வேண்டும். பரிசுகள் வழங்கப்படும் . ஆனால் இந்த விஷயத்தில் மாநிலத்தின் நலன் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறது . தமிழ்நாடு என்று மட்டும் கிடையாது, ஆந்திரா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் மக்கள் தொகையை வெற்றிகரமாக குறைத்ததால், இரண்டு லோக்சபா தொகுதிகள் வரை இழந்துள்ளன. அதேநேரம் மக்கள் தொகையை குறைக்க முடியாத மாநிலங்களில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதில் இரண்டு மோசமான செயல்பாடுகள் உள்ளன, ஒன்று நல்லபடியாக அரசின் திட்டங்களை செயல்படுத்திய மாநிலம் பாதிக்கப்படுகிறது. இன்னொன்று ஒழுங்காக திட்டங்களை செயல்படுத்தாத மாநிலங்கள் பலன் பெறுகின்றன. இந்த விஷயம் மிகவும் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட வேண்டும். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. 138 கோடி மக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். 2050ஆம் ஆண்டில் உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் கௌரவிக்கப்பட வேண்டும்.

நிறைய நஷ்டம்
ஐந்து வருடங்களில் ஒரு லோக்சபா உறுப்பினரால் 200 கோடி ரூபாய் அளவுக்கு அந்த தொகுதிக்கு பலன் கிடைக்கும். சரியான பண மதிப்பீடு அளவில் செய்ய முடியாவிட்டாலும், தோராயமாக இந்த அளவுக்கான பலன் கிடைக்கத் தான் செய்யும். அப்படிப்பார்த்தால் 1967 முதல் ஒவ்வொரு தேர்தலுக்கும் தமிழகம் 400 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெற்ற 14 தேர்தல்களில் 28 தொகுதிகள் என்று யூக அடிப்படையில் நாம் கணக்கீடு செய்து பார்த்தால் சுமார் 5,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை தமிழகம் பெறவேண்டும்.

ஒரே ஓட்டு போதுமே
1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கவிழ்ந்தது. ஒரே ஒரு எம்பி ஒரு அரசை கவிழ்க்க சக்தி பெற்றவர் என்ற சூழ்நிலை இருக்கும்போது, தமிழ்நாடு 2 எம்பிக்களை இழந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் சிறப்பாக குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தியதற்காக இரண்டு தொகுதிகள் இழக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு லோக்சபா தொகுதிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றால், குறைந்தபட்சம், ராஜ்யசபா எம்பிக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த இழப்பை ஈடு கட்டுவதற்கு இது ஒரு வழியாகும் . சிறப்பாக குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்களுக்கு ஊக்கம் அளிப்பது போலவும் இது இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் ராஜ்யசபா எம்பிகள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications