பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் டிஸ்மிஸ்? அதிரடி காட்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை.. பின்னணி
சென்னை: தமிழகத்தில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார். இதன் அடுத்தக்கட்டமாக பாலியல் புகாரில் சிக்கி குற்றச்சாட்டு நிரூபணமானவர்களை டிஸ்மிஸ் செய்ய பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக சிறுமி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. 3 ஆசிரியர்களும் போக்சோவில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாளாளரின் கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. மாணவிகளை பாதுகாத்து கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்களே அவர்களிடம் தவறாக நடந்து கொள்வது பலரையும் கவலை கொள்ள செய்துள்ளது. அதோடு தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கிடையே, பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழக பள்ளிகளில் பாலியல் தொல்லை புகாரில் சிக்கி குற்றம் நிரூபணமான ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த முடியும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை நம்புகிறது. அதோடு முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications