கொரோனா பிரஸ் மீட்களால் ஃபேமஸ் ஆனவர்.. தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் மரணம்
சென்னை: தமிழ்நாடு எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்.. கடந்த இரு மாதங்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். கொரோனா காலத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா சூழல் குறித்து பிரஸ்மீட்களை அளித்து வந்தவர் பீலா வெங்கடேசன். இதனால் அப்போது தமிழ்நாடு முழுக்க அறியப்பட்ட ஒருவராக பீலா வெங்கடேசன் இருந்தார்.

பீலா வெங்கடேசன் மறைவு
அப்போது சுகாதாரத் துறைச் செயலாளர் பதவியில் இருந்த பீலா வெங்கடேசன் கொரோனா குறித்தும் அரசு எடுத்த தகவல்கள் குறித்தும் விரிவான விளக்கங்களைக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் மக்களிடையே கொரோனா பற்றி இருந்த குழப்பம் குறைய இவர் பிரதானக் காரணமாக இருந்தார். சுகாதாரத் துறைக்குப் பிறகும் பல முக்கிய பொறுப்புகளை பீலா வெங்கடேசன் வகித்து வந்தார். கடைசியாக அவர் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சூழலில் தான் அவருக்கு மூளையில் டியூமர் கண்டறியப்பட்டது. இந்தப் புற்றுநோய் காரணமாக அவர் தொடர்ச்சியாகச் சிகிச்சையும் எடுத்து வந்தார். இருப்பினும், அவரது உடல்நிலையில் சீராகவில்லை. குறிப்பாகக் கடந்த இரு மாதங்களாக அவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
என்ன நடந்தது!
இருப்பினும், மூளையில் ஏற்பட்ட டியூமரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர், சிறுதாவூர் அருகே உள்ள இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கேயே அவர் காலமாகி உள்ளார். மக்களிடையே பரவலாக அறியப்பட்ட அதிகாரியாக இருந்த பீலா வெங்கடேசனின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், பாமக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் பீலா வெங்கடேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
முதல்வர் இரங்கல்
பீலா வெங்கடேசன் மறைவுக்குத் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறை செயலாளராகப் பணியாற்றியவர். அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பீலா வெங்கடேசன்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1969ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் பீலா வெங்கடேசன். இவரது தாய் ராணி வெங்கடேசன் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். மேலும், சட்டசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.. இவரது தந்தை எல்.என். வெங்கடேசன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குநர் ஆவார்.
பீலா வெங்கடேசன் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். அதன் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இவர், 1997ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகப் பணிக்குச் சேர்ந்தார். இவர் ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், சமீபத்தில் தான் அவர் ராஜேஷ் தாஸிடம் இருந்து விவகாரத்து கோரியிருந்தார்.












Click it and Unblock the Notifications