அப்பாடா 2 மாசம் முடிஞ்சுருச்சு.. பெற்றோர்கள் ஹாப்பி! நாளை திறக்கப்படும் பள்ளிகள்.. எல்லாம் ரெடி!
சென்னை: 2024-2025 கல்வியாண்டு முடிந்து 2025-2026ஆம் கல்வியாண்டு நாளை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதை அடுத்து பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோரும் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் முதல் நாளில் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க வேண்டும் எனவும், புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முதல் நாளிலேயே வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.
பொதுவாக கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் நாளில் பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வந்ததால் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு கோடை வெயில் அதிகரித்ததாலும், கடந்த ஆண்டு ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாலும் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஏப்ரல் 17ஆம் தேதி வரையும், ஆறாம் தேதி முதல் 9ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 24ஆம் தேதி வரையும், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஜூன் இரண்டாம் தேதியான நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து பள்ளி கல்லூரிகள் மாணவர்களை வரவேற்க தயாராகி இருக்கின்றன. பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், புத்தகப்பை. காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை மழைக்கோட்டு, பூட்ஸ் மற்றும் சீருடைகள், காலுறைகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகியவைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் குடோன்களில் இருந்து ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட பொருட்களை வழங்க இருக்கின்றனர். பள்ளிகள் திறக்கும் நாள் அன்று பள்ளிக்குச் செல்லும் ஏழை எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து பயண அட்டை தொடர்பாக எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை. புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை உற்சாகத்துடன் வரவேற்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சார்பிலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு கல்வி சீர் கொடுத்து வரவேற்க தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications