சரவெடி.. ஓ இதுதான் பிளானா.. செந்தில் பாலாஜி யு.கே போனது இதுக்குத்தானா? வருகிறது செம அறிவிப்பு!
தமிழ்நாட்டின் இந்த முயற்சி காரணமாக உலகிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் நம்பர் 1 இடத்தை பிடிக்க கூட வாய்ப்புகள் உள்ளன.
சென்னை: டென்மார்க் மட்டுமின்றி யு.கேவுடனும் தமிழ்நாடு அரசு கடல் காற்றாலை மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தத்தை செய்ய உள்ளது.
மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
அணு மின் நிலையம், அனல் மின்நிலையம் மட்டும் இன்றி புகையை வெளியேற்றாத, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதை மனதில் வைத்தே தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மின் நிலையம்
150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (22/12/2022) 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

டென்மார்க்
சமீபத்தில் கூட இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு டென்மார்க்கை அணுக முக்கிய காரணம் இருக்கிறது. உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக உள்ளது.

செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டென்மார்க்கை அணுக இதுவே காரணம் ஆகும். காற்றாலை மின் உற்பத்தி மைய மார்க்கெட்டில், அதிலும் கடலில் மையங்களை அமைப்பதில் உலகிலேயே டென்மார்க்தான் தற்போது டாப். இதன் காரணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது டென்மார்க் மட்டுமின்றி யு.கேவுடனும் தமிழ்நாடு கடல் காற்றாலை மின்சாரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய உள்ளது. 5 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்றார்.

காற்றாலை
கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய வெளிநாடு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை தொடர்ந்து யு.கே அதிகாரிகள் விரைவில் தமிழ்நாடு வர உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல் பகுதிகளை பார்வையிட உள்ளனர். அங்கே கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளனர். தமிழ்நாடு தனி நாடாக வைத்து பார்த்தால் உலகிலேயே இரண்டாவது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நாடாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் இந்த முயற்சி காரணமாக உலகிலேயே காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 இடத்தை பிடிக்க கூட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications