அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!.. முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.
அதிமுகவின் அவைத் தலைவராக கடைசி மூச்சு இருக்கும் வரை மதுசூதனன்தான் கட்சியின் அவைத் தலைவர் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது முதல் மதுசூதனன் அவைத் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். இதையடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்த பதவியில் தமிழ்மகன் உசேன், செங்கோட்டையன், செம்மலை, பொன்னையன், தனபால் உள்ளிட்டோர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வந்தது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடிய போதும் அவைத் தலைவர் பதவி குறித்து நிர்வாகிகள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்மொழிந்த
இதை முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார். இதையடுத்து தமிழ்மகனுக்கு ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதிமுக வரலாற்றில் முதல் முறையாக இந்த பொறுப்பு என்ற வார்த்தை அவைத் தலைவர் பதவிக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு கட்சி பொறுப்புகளில் இருந்து வந்தார். அதிமுக ஆட்சியில் தமிழ்மகன் உசேன் வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது அதிமுகவின் எம்ஜிஆர் மன்றச் செயலாளராக தமிழ்மகன் இருந்து வருகிறார்.
Recommended Video

பொதுக் குழு கூட்டம்
பொதுவாக அவைத் தலைவர் என்ற பதவியானது பொதுக் குழு கூடி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று. தற்போதைய சூழலில் பொதுக் குழுவை கூட்ட முடியாததால் தற்காலிக அவைத் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பொதுக் குழு கூடி தமிழ்மகன் உசேனையே நிரந்தர அவைத் தலைவராக அதிமுக நியமனம் செய்ய வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications