தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு! ஆக்டிவ் கேஸ்களும் 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெறும் 3086 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் 56 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த ஜன. 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700ஆக இருந்த வைரஸ் பாதிப்பு இப்போது 3000 என்ற அளவில் உள்ளது.
வரும் நாட்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஊரடங்கு தளர்வுகள் வரும் பிப். 15 உடன் முடியும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சரியும் கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் தடுப்பூசி எண்ணிக்கை.. ஆனாலும் ஒரு சிக்கல்..?
தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மேற்கு மொத்தம் 3,086 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,31,154ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாசிட்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 3.6ஆக இருந்த பாசிட்டிவ் விகிதம் இன்று 3.3ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாகக் கோவையில், 7.5ஆகவும் திருப்பூரில் 6.3ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல தமிழகத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று 66,992 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 56,002ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களுக்குப் பின்னர் ஆக்டிவ் கேஸ்கள் 60 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 14,051 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,37,265ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
மேலும், தினசரி கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. ஓமிக்ரான் அலை சமயத்தில் 50 வரை சென்ற தினசரி உயிரிழப்புகள் இப்போது 25ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 14 தனியார் மருத்துவமனைகளிலும் 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 37,887 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
அதிகபட்சமாக இன்று தலைநகர் சென்னையில் 590 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோவையில் 569 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவாகவே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.