தமிழகத்தில் செம ஷாக்..வெறும் 15 நாட்களில் இரட்டிப்பான கொரோனா பரவல்.. உயரிழப்பும் 3 மடங்கு அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 1,23,258ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்திருந்தது. அப்போது தினசரி கொரோனா உயிரிழப்பும் 42ஆக இருந்தது.
இந்நிலையில், 15 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் 15 நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சி.. ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 24 கொரோனா நோயாளிகள் பலி
21 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் 21 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,41,021 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 17 பேர் உட்பட 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 12,28,064 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 76 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், மேலும் 46 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா காரணமாகப் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,468ஆக அதிகரித்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 1,23,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,016 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 10,90,338 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தலைநகரில் உச்சத்தில் கொரோனா
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 6,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சென்னையில் தற்போது 32,785 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 5384 பேர் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
4 மாவட்டங்களில் 1000ஐ கடந்த கொரோனா
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 1618 பேருக்கும் கோவையில் 1566 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 1207 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து மதுரையில் 16 பேரும் காஞ்சிபுரத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
புதுவை கொரோனா பாதிப்பு
அதேபோல புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 799 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 650 நபர்களுக்கும், காரைக்காலில் 51 நபர்களுக்கும், ஏனாமில் 73 நபர்களுக்கும் மாஹேவில் 25 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் புதுச்சேரியில் 12 நபர்களும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் 2 நபர்களும் என 15 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்ந்துள்ளது.