தமிழகத்தில் 35 ஆயிரத்தை தாண்டிய தினசரி வைரஸ் பாதிப்பு... ஒரே நாளில் 397 பேர் கொரோனாவால் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 1299 சிறார்கள் உட்பட 35,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பும் 400ஐ நெருங்குகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் வைரஸ் பரவல் குறைந்திருந்தாலும், மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த சில தினங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு 33 ஆயிரத்தில் இருந்த நிலையில், தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,71,094 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 9 பேர் உட்பட 35,579 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1299 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்களாகும். ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 17,34,804 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் மாநிலத்தில் 400ஐ நெருங்குகிறது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 212 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 185 பேர் உட்பட மொத்தம் 397 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 97 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள். தமிழ்நாட்டில் தற்போது வரை கொரோனாவால் 19,131 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதும் மாநிலத்தில் உள்ள சுகாதார துறை கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 2,53,576 இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 2,63,390ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 25,368 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 14,52,283 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ள போதும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையிலேயே வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 6073 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 73 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல கோவையில் 3335 பேருக்கும் செங்கல்பட்டில் 2092 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications