வந்துருச்சு கோடை .. ஏசியை எல்லாம் தூசு தட்டிருப்பீங்களே.. மின்வாரியம் சொன்ன முக்கிய அறிவுரை!
அப்பாடா.. ஏசி ரெடி ஆயிடுச்சு.. என நாம் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு சைலண்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சென்னை: கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியிருக்கும் நிலையில் பெரும்பாலானோர் ஏசியை சர்வீஸ் செய்யும் வேலையில் பிசியாக இருக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் அதிர்ச்சி தரும் ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.
மின்சார வாரியம் இப்படி சொல்றத பார்த்தா இந்தக் கோடைக்காலம் நம்மை வெச்சு செய்திடும் போலேயே என்ற 'மைண்ட் வாய்ஸ்' தான் அனைவருக்கும் கேட்கிறது.
சரி.. அப்படி என்னதான் சொல்லி இருக்கிறது மின்சார வாரியம்.. வரும் கோடைக்காலத்தை எப்படி சமாளிக்கலாம்... வாங்க பார்க்கலாம்.

இந்தக் காட்டு காட்டுதே..
பொதுவாக, கோடைக்காலம் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து தான் தொடங்க ஆரம்பிக்கும். அதாவது கிட்டத்தட்ட இப்போதைய காலக்கட்டத்தில்.. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாகவே கோடையின் உக்கிரம் தொடங்கிவிட்டது. பிப்ரவரியிலேயே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அப்படியென்றால், இப்போது கேட்கவா வேண்டும். காலை 10 மணிக்கு பிறகு வெளியில் செல்லவே முடியாத அளவுக்கு வெயில் ஒரு காட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ இன்றைக்கு சென்னையில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் இன்று வெயிலின் கொடுமையில் இருந்து சென்னையன்ஸ் தப்பி இருக்கிறார்கள்.

தூசு தட்டப்படும் ஏசி
இதனிடையே, வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த ஏசி, ஏர் கூலர் மக்கள் தூசு தட்ட தொடங்கியிருக்கிறார்கள். ஏசி சர்வீஸ் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அப்பாடா.. ஏசி ரெடி ஆயிடுச்சு.. என நாம் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு சைலண்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுதான் இன்று தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

"சைலண்ட் வார்னிங்"..
அதாவது, இந்தக் கோடைக்காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்படி இல்லையெனில், இந்தக் கோடைக்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. திடீரென தமிழகத்தில் மின்சார பயன்பாடு அதிரடியாக அதிகரித்ததே அவர்களின் இந்த வார்னிங்குக்கு காரணமாக இருக்கிறது.

அதுக்காக இப்படியா..
தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் உக்கிரம் அதிகரித்ததால் ஏசி, ஏர் கூலர், ஃபேன் ஆகியவற்றின் பயன்பாடு கணிசமாக அதிகரித்தது. மேலும், வெயிலின் உஷ்ணத்தை சமாளிக்க ஐஸ்க்ரீம், ஜூஸ் கடைகளும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதனால் அந்தக் கடைகளில் இருக்கும் ப்ரிட்ஜ்களும் அதிக நேரத்துக்கு இயங்கி வருகின்றன. மேலும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் 24 மணிநேரமும் ஏசி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடு எக்குத்தப்பாக எகிறி வருகிறது.

"பார்த்து செலவு பண்ணுங்க பாஸ்"..
இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் மொத்த பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் 17 ஆயிரத்துக்கு 705 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுதான் மின்சார வாரியத்துக்கு அலாரத்தை அடித்திருக்கிறது. இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் மின்சார பயன்பாடு உயரக்கூடும். இப்படி கட்டுப்பாடு இல்லாமல் மின் பயன்பாடு உயர்ந்தால் கோடைக்காலத்தில் மின்வெட்டுகள் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும். எனவேதான், இந்த அதிரடி வார்னிங்கை மின்வாரிய அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications