தமிழகத்தில்.. மறுபடியும் பஸ் ஓடப் போகுது.. 18ம் தேதி முதல்.. அரசு சூப்பர் பிளான்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தவுடன் 18 ஆம் தேதி முதல் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பஸ், ரயில், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

வரும் 17ஆம் தேதியுடன் 3ஆவது முறையாக அமலில் உள்ள நிலையில் அதன் பிறகாவது பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பேருந்துகளை இயக்க தயாராக இருக்குமாறு போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் கூறுகையில் தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க தயாராக இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமிநாசினி திரவம் வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுநர், நடத்துநர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பயணிகள் இருக்கையில் அமர மார்க் செய்ய வேண்டும். பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்தால் இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications