இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்.. அழிந்து வரும் இனத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை!
சென்னை: இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உதயமானது 17வது புதிய பறவைகள் சரணாலயம்! முதல்வர் சொன்ன ஹாப்பி நியுஸ்! எங்கே தெரியுமா?
தமிழக அரசு அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அறிவிக்கை செய்துள்ளது.
தேவாங்கு இனம்
தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
அழிந்து வரும் உயிரினம்
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும்.
பாதுகாக்க நடவடிக்கை
அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.
கடவூர் தேவாங்கு சரணாலயம்
அதன்படி அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிவிக்கை செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.