சட்டசபை மசோதா மாநில அரசு அதிகார வரம்பை மீறுகிறதா? என்பதை கண்காணிப்பது ஆளுநர் பணி- ஆர்.என்.ரவி
சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதா மாநில அரசு அதிகார வரம்பை மீறுகிறதா? என்பதை கண்காணிப்பது ஆளுநர் பணி என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஆளுநர் சிவில் பயிற்சி பெறும் மாணவ-மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளை ஆளுநர் வழங்கினார். தேர்வுக்கு தயாராவது, படிப்பதை புரிந்து படிக்கவேண்டும், ஆங்கிலத்தில் புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், ஆளுமையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினார். தனது அனுபவமாக காவல்துறை பணியில் மத்திய அரசின் பணியை தேர்வு செய்து பணியாற்றியதும், அரசின் பல்வேறு துறைகளில் சவால் மிகுந்த இடங்களில் பணியாற்றியதையும், வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றியதையும் குறிப்பிட்டார். பின்னர் தற்போதுதான் அமைதியான சூழ்நிலை நிலவும், கலாச்சார பெருமைகொண்ட மக்கள் வாழும் தமிழகத்தில் வசிக்கிறேன். தனிப்பட்ட விஷயத்தில் எனக்கு இது வளர்ச்சியான ஒன்று என்று சொல்லலாம். தொன்மை வாய்ந்த மொழியான தமிழை கற்றுக்கொள்கிறேன் என்று பெருமை பொங்க தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்கள் ஏழாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் அதிகாரம் என்ன? மாநில அரசு என்னென்ன சட்டங்களை இயற்றலாம்? என கூறப்பட்டுள்ளது. ஒத்திசைவு பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றாவிட்டாலும் மாநில அரசே சட்டமியற்றலாம். ஒருவேளை மத்திய அரசு இயற்றிய சட்டம் போல மாநில அரசு சட்டம் இயற்றினாலும் அது மத்திய சட்டத்துக்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு முழு பெரும்பான்மை இருப்பதை வைத்து அந்த கட்சி ஆளும் அரசு எந்த மசோதாவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதற்கு சட்ட அனுமதி வழங்கும் இடத்தில் தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது. ஆளுநரின் பணி, அந்த இயற்றப்பட்ட மசோதா மாநில அரசுக்குரிய அதிகார வரம்பை மீறாத வகையில் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆகும். ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்பை பாதுகாப்பது ஆகும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications