திமுக, அதிமுக..2 பேரும் உஷாரய்யா உஷாரு.. உரக்கச் சொல்லும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!
Recommended Video
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளானது அதிமுக, திமுகவின் கிராமப்புற கட்சி கட்டமைப்புகள் சம அளவில் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த போக்கானது சட்டசபை தேர்தலில் ஊரகப் பகுதிகளில் அதிமுக- திமுக இடையே வலிமையான போட்டி இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
உள்ளாட்சி தேர்தல்களைப் பொறுத்தவரை உள்ளூர் பிரச்சனைகளின் அடிப்படையில்தான் வாக்களிக்கப்படுகிறது என்கிறது பொதுவான வாதம். அதேநேரத்தில் ஆளும் கட்சிக்கே சாதகமான சூழ்நிலைகள் உள்ளாட்சி தேர்தல்களில் நிலவும் என்பதும் யதார்த்தம்.
இவற்றுக்கு அப்பால் காலையில் முடிவுகள் வெளியானது முதலே ஆளும் அதிமுகவும் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவும் சம அளவில் இடங்களை கைப்பற்றி வருகின்றன. சில நேரங்களில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தும் வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி
உயர்நீதிமன்றத்தில் திமுக
இன்னும் சில பகுதிகளில் திமுக வெற்றி பெற்ற இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என திமுக புகார் வாசித்திருக்கிறது. அத்துடன் உயர்நீதிமன்றத்திலும் திமுக முறையீடு செய்துள்ளது.
அதிமுகவின் வலிமை
அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா என்கிற ஆளுமை இல்லாத நிலையில் இரட்டை தலைமை கொண்ட கட்சியாக தேர்தல் களத்தை சந்தித்தது. என்னதான் எதிர்க்கட்சிகள் மிக கடுமையான விமர்சனத்தை அதிமுக அரசு மீது வைத்தாலும் அக்கட்சியின் தொண்டர் பலம் இம்மியளவும் குறைந்து போய்விடவில்லை; மக்களிடம் அதன் செல்வாக்கை அசைத்துப் பார்க்க முடியவில்லை என்கின்றன தேர்தல் முடிவுகள்.
அதிமுக பிரசாரம் பொய்த்தது
8 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது; ஒரு தேர்தலிலும் திமுக ஜெயிக்கவே வாய்ப்பு இல்லை என அதிமுக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் திமுக பெற்றுள்ள இடங்கள், அதிமுகவின் பிரசாரம் அல்லது கணக்குகளை தவிடு பொடியாக தகர்த்து இருக்கிறது என்பதில் மிகை இல்லை.
அதிக இடங்களை திமுக வெல்லும்?
இதேபோன்றே முடிவுகள் தொடர்ந்து வந்தால் 2011 உள்ளாட்சி தேர்தலில் வென்ற இடங்களைவிட மிக அதிகமான இடங்களை திமுக வெல்வதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. இது திமுகவுக்கு ஆகப் பெரும் உந்துசக்தியாக இருக்கும். அடுத்து வர உள்ள நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும்.
சமமான கட்டமைப்பு
அதேநேரத்தில் அதிமுக- திமுக இரு கட்சிகளின் அடிப்படை கட்சி கட்டமைப்பு ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது இத்தேர்தல் முடிவுகள். இது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாக இருந்தாலும் கட்சி கட்டமைப்பு என்பது சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும்.
சட்டசபை தேர்தல்
ஜெயலலிதா, கருணாநிதி என்கிற ஆளுமைகள் மறைந்தாலும் இரு கட்சிகளுமே தற்போது வரை தங்களது கட்சி கட்டமைப்பை நீர்த்து போகச் செய்யாமல் வைத்திருக்கின்றன. இந்த கட்டமைப்பு பலத்துடன் சட்டசபை தேர்தலில் முன்வைக்கும் பிரசாரம், கூட்டணி வியூகம்தான் யார் கையில் ஆட்சி என்பதை தீர்மானிக்கும்.
சட்டசபை தேர்தல் வியூகம்
அதனால் சட்டசபை தேர்தல் என்பது அதிமுக- திமுக இரண்டுக்குமே மிகப் பெரிய அக்னி பரீட்சையாக இருக்கப் போகிறது. கூட்டணிகளின் பலம், ஒருங்கிணைப்பு, மக்களை சென்றடையும் பிரசாரம் இவற்றில் அதீத அக்கறை எடுத்துக் கொண்டு இரு அணிகளும் களத்தில் இறங்கினால் சட்டசபை தேர்தல் முடிவுகளும் 'அடேங்கப்பா' என ஆச்சரியப்படும் வகையில்தான் இருக்கும்.