அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றப்படுகிறதா? அமைச்சர் மா.சு விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாவது அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஓமிக்ரான் கேஸ்கள் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியது. மேலும், ஓரிரு வாரங்களில் விரைவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டதால், கட்டுப்பாடுகளும் மெல்லத் தளர்த்தப்பட்டது.
5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?
கொரோனா வைரஸ்
இந்தச் சூழலில் கொரோனா பாதிப்பு சில இடங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று கூட தமிழ்நாட்டில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 1021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் சென்னை
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் 22 இடங்களில் கொரோனா அதிகமாக இருக்கும் கொரோனா கிளஸ்டர் உள்ளது. வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது.
மாஸ்க்
மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் முதலில் மாஸ்க் அணிய அவசியம் இல்லை என்றார்கள். பின்னர் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் இப்போது மீண்டும் மாஸ்க் போட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் நாம் அப்படிக் கூறவே இல்லை. தமிழ்நாட்டில் எப்போதும் மாஸ்க் அணிவது கட்டாயமே. மாநிலத்தில் 42 லட்சம் பேர் முதல் டோஸ் வேக்சின் இன்னும் செலுத்தவில்லை. 1.22 கோடி பேர் உரிய நேரத்தில் வேக்சின் செலுத்தவில்லை.
பள்ளிகள் திறப்பு
வரும் ஜூன் 13இல் பள்ளிகள் திறக்கப்பட்டதும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. கொரோனா பரவல் சற்று அதிகரித்தாலும் பாதிப்பு 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது. எனவே பள்ளிகளை திறப்பதில் பிரச்சினை இல்லை. பூஸ்டர் டோஸ் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ.388 மட்டுமே. அதற்கு மேல் விற்கக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.