தமிழகத்தில் நுழைந்தது புதிய BA5 வகை ஓமிக்ரான்.. மின்னல் வேகத்தில் பரவுமாம்! ஆபத்தானதா? முழு விளக்கம்
சென்னை: கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா காரணமாக இந்த 3ஆம் கொரோனா அலை ஏற்பட்டது.
இருந்த போதிலும், டெல்டா கொரோனாவை போல இல்லாமல் ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது. மேலும், சில காலம் மட்டுமே வைரஸ் பாதிப்பு நீட்டித்து.
கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது என்ன?
ஓமிக்ரான்
சில வாரங்களிலேயே வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. இதன் காரணமாக வைரஸ் கட்டுப்பாடுகளும் விரைவில் விலகிக் கொள்ளப்பட்டது. மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் உலகில் சில நாடுகளில் புதிய உருமாறிய ஓமிக்ரான் பாதிப்புகள் பரவ தொடங்கின. BA 4 மற்றும் BA5 என்று அழைக்கப்படும் இந்த ஓமிக்ரான் வேகமாகப் பரவுவதாக இருந்தன.
புதிய உருமாறிய ஓமிக்ரான்
குறிப்பாக BA5 ஓமிக்ரான், மற்ற வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் வகையில் இருந்தன. உலகின் சில நாடுகளில் இதனால் வைரஸ் பரவல் வேகமும் அதிகமாக இருந்தது. இருப்பினும், இந்த வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இந்த ஆபத்தான வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் இப்போது சிலருக்கு இந்த புதிய உருமாறிய BA 4 மற்றும் BA5 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8 பேர்
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், "கடந்த மாதம் இறுதி வரை சேகரிக்கப்பட்ட 139 மாதிரிகள் வழக்கமான மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் BA5 வகை ஓமிக்ரான் 8 பேருக்கும் BA 4 வகை ஓமிக்ரான் 4 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறை
ஏற்கனவே தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் BA5 வகை ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் இந்த வகை ஓமிக்ரான் உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த BA4 மற்றும் BA5 ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 8 பேரும் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர். அவர்களில் 6 பேரிடம் நானே நேரடியாகப் பேசினேன். அவர்கள் அனைவரும் நலமாகவே உள்ளனர். அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். அவர்களில் இருவர் தனிமை காலம் முடிந்து வழக்கமான பணிகளுக்கே திரும்பிவிட்டனர். அனைவருக்கும் 2-3 நாட்களுக்கு மட்டுமே லேசான அறிகுறிகள் இருந்தன" என்றார்.
விளக்கம்
தமிழ்நாட்டில் மருத்துவ பொருட்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சுகாதாரத் துறை ராதாகிருஷ்ணன், "தமிழக மருத்துவ சேவை கழகம் எவ்வித ஒழிவு மறைவு இல்லாமல் தான் டெண்டர் விடுகிறது. இந்த புகாரில் முதலில் டெண்டர் பணிகள் முடிந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவ சேவை கழகம் சார்பில் 326 மருந்துகள், 366 அறுவை சிகிச்சை பொருட்கள், 500 மருத்துவ கருவிகளை வாங்குகிறோம்.
விலை குறைவு
இந்த ஆண்டுக்கான டெண்டர் முடிந்ததா என்று தெரியவில்லை. அதை உறுதி செய்து விட்டு பதில் கூறுகிறேன். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் தகவல் கேட்கப்படும். குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உணவை மாற்றி ஒப்பிடக் கூடாது. இது மத்திய அரசின் சிஜிஎச்எஸ் விலைப் பட்டியல் உடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையிலேயே வாங்குகிறோம்" என்று தெரிவித்தார்.