10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை.. முதல்வருடன் செங்கோட்டையன் சந்திப்பு.. என்ன முடிவு?
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரக்கூடிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஆனால், அப்போது ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகாத காலகட்டம் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே குழப்பம் நிலவியது.
"தவிடுபொடி"யாகும் கனவுகள்.. "சின்னாபின்ன"மாகும் இமேஜ்.. டிரம்புக்கு எதிராக திரும்பிய.. காலின் பாவெல்
ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
எனவே, ஜூன் 15ஆம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என்று பிறகு அறிவிப்பு மாற்றப்பட்டது. ஹால் டிக்கெட் கொடுக்கும் பணிகள் துவங்கி விட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும், மாணவர்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹைகோர்ட் அறிவுறுத்தல்
தேர்வை இப்போது நடத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசே மீறலாமா, பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு என்ன அவசரம், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கொரோனா பரவல்
மற்றொரு பக்கம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதிலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பாதிப்பு என்பது தீ போல பரவி வரக் கூடிய இந்த சூழ்நிலையில் பதட்டமின்றி எப்படி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியும் என்று பெற்றோர் குமுறி வருகின்றனர்.
அரசு உறுதி
இந்த நிலையில்தான், இன்று, நண்பகல் 12 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்பாக தேர்வு நடத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால் தேர்வை தள்ளி வைப்பது குறித்து இதில் முடிவெடுக்கவில்லை என தெரிகிறது. ஏனெனில் அரசு இன்று, ஹைகோர்ட்டில் அளித்த பதிலில், உரிய பாதுகாப்புடன் தேர்வு நடத்துவோம் என உறுதியளித்துள்ளது.